Followers

Saturday, October 25, 2008

ஈழத்துப் பிரச்சினையும் இந்திய மாற்றங்களும்

வணக்கம் அனைவருக்கும். ஈழத்தமிழர் பிரச்சினையில் எந்தப் பதிவுக்குச் சென்றாலும் ஒன்று புலிகளின் ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலை என்ற கோட்டிலேயே பதிவுகளும்,பின்னூட்டங்களும் வருகின்றன.காரணம் என்ன?

இந்தப் பிரச்சினையில் புலிகளின் நிலை தவிர்த்து அடுத்தப் பக்கத்துக்கு இதன் அரசியல்,சமூகம்,பொருளாதாரம் சார்ந்த சூழல்களும் மாற்றங்களும் நிகழவில்லை என்பதும்
புலிகளின் வீரமோ அல்லது எதிர்நிலை கொள்பவர்கள் கூறும் தீவிரவாத முத்திரை முடிவுக்கு வந்து விட்டால் ஈழத்தமிழர் பிரச்சினையினை மேல் எடுத்துச் செல்வது இலங்கை அரசுக்கு எளிதாகி விடும் என்ற கோட்டிலே தற்போதைய ஈழத்துப் பிரச்சினை பயணிக்கிறது.

சரி புலிகளுக்குத்தான் இலங்கை அரசுடன் கூட்டு மனோபாவம் இல்லையென்று வைத்துக் கொண்டாலும் கூட்டு சேரும் மனோபாவத்தில் தற்போது இலங்கை அரசுடன் சமரச எண்ணங்களுக்கு துணைபோகத் தயாராக இருக்கும் ஏனைய தலைவர்களை ஈழத்து மக்கள் ஏற்றுக் கொண்டு ஜனநாயகப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சூழ்நிலை உள்ளதா? கருணா,பிள்ளையான் தரப்பு பகுதியின் தற்போதைய நிலை எங்காவது முன்னிறித்தப் படுகிறதா?இவர்கள் நாணயத்தின் இரு பக்கங்களைப் பார்த்தவர்கள்.ஆனாலும் மக்கள் மத்தியில் சோபிக்கவில்லை என்ற தோற்றமே தெரிகிறது.எப்படியோ புலிகளைப் பலமிலக்கச் செய்துவிட்டால் இலங்கை அரசாங்கம் தனது பகடையை உருட்ட எளிதாக இருக்கும் என்ற நோக்கிலேயே தற்போதைய போர் முன்னிறுத்தப் படுகிறது.

பதிவர்களிலும்,பின்னூட்டமிடுபவர்களிலும் யாருக்காவது போருக்கான நேர் அறிமுகம் இருக்கிறதா?ஒருவேளை இதனைப் படிக்கும் ஈழத்தமிழனுக்கு போரின் வடுக்கள் இருக்கலாம்.ஒரு போரில் பொதுமக்கள் பாதிக்கப் படக்கூடாது என்பதும் அவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல கால அவகாசம் கொடுப்பதும்,அப்படி தனது உடமைகள் அனைத்தையும் விட்டுச் செல்பவர்களை பாதுகாப்பான இடத்தில் அமர்த்துவதும் போரியில் மரபு.விமானத் தாக்குதல் என்பது துள்ளியமாக போர் நிலைகளை அழிப்பதென்பது.அதற்கு முன்பு கூட அந்த இடம் தாக்குதலுக்கு உள்ளாகப் போகிறதென்று காகித நோட்டிஸ்களை விமானத்திலிருந்து போடுவதென்று விதிமுறைகள் உள்ளது.இதனையெல்லாம் இலங்கை அரசாங்கம் பின்பற்றியுள்ளதா எனத்தெரியவில்லை.காரணம் மனித வெறுப்பின் உச்சக்கட்டம் போரில் தெரிவது.அழிவு ஒன்றே குறிக்கோள்.இதில் இரு தரப்புமே பொறுப்புக்குள்ளாவார்கள்.

சாதாரண ஈழத்தமிழனும் இலங்கைக் குடிமகனும் சேர்ந்து வாழ்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்கப் போவதில்லை இத்தனை இழவும் இரத்தம் சிந்துதலுக்குப் பிறகும் கூட.சாதாரண சிங்களத்தவர்கள் பழகுவதற்கு இனிமையானவர்களே.சாப்பாட்டுக் காரத்தை விட்டுப் பார்த்தால் உணவு முதற் கொண்டு எல்லாமே செரிக்கும்,நட்பு இசை என்று எல்லாமே இனிக்கும்.எனவே இரு மொழியின் மரபுகளும் மீண்டும் இணைக்கப் படுவது அவசியம்.

இங்கே புலிகளைக் குறை கூறவும் விமர்சனம் செய்யவும் ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்.எதிர்தரப்பில் இலங்கையில் சமரசம் விரும்பாத கட்சிகளும் முக்கியமாக நம்மூர் இந்து தீவிரவாத அமைப்புக்களுக்கு நிகரான புத்த பிட்சுக்களும் சில சட்ட அமைப்புகளுமே புலிகளைத் தவிர்த்து இந்தப் போரை முன் கொண்டு செல்கிறது.புலிகள் சார்ந்த ஊடகங்களைக் கவனித்தால் புரியும் ஒன்று புலிகளுக்கு சமாதானத்தில் நம்பிக்கையில்லை என்பதல்ல.

புலிகளின் துவக்க கால முதல் கொண்டுள்ள ஒரே குறிக்கோள் தமிழீழம்.

இந்தக் கோட்டுக்கு இலங்கை அரசாங்கம் அன்றும் இன்றும் வரத்தயாரில்லை.இதற்கான காரணம் கொண்டே சுனாமி பொருளாதாரப் பங்கீட்டில் கூட ஈழத்துப் பகுதிகளுக்கு சம பங்கீடில்லை.ராஜ பக்சே சகோதரர்களின் முரட்டுத்தனம் சமாதானத்திற்கான திசையிலும் செல்வதாயில்லை.அவர்களது ஒரே குறிக்கோள் புலி ஒழிப்பு.அப்புறம் எல்லாம் தமது விருப்பத்திற்கு வளைந்து கொடுக்கும் என்பதும் அதுவே நிதர்சனமுமாகும்.

புலிகள் ஏனைய ஈழத்து அமைப்புகளை அணைத்துக் கொண்டு தங்களின் குறிக்கோளில் முன்னேறாமல் போனதும் அதே சமயத்தில் புலி எதிர்ப்பாளர்கள் ஈழத்து தமிழர்களுக்கென்று உறுதியான ஜனநாயக நிலைப்பாடு கொள்ளாததும் தமிழர்களின் பின்னடைவைத் தருகிறது.அனந்த சங்கரி,டக்ளஸ் தேவானந்தா போன்றோர் இலங்கை சார்ந்த நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் அவர்களும் வெறும் பகடைக் காய் நிலையில்தான் உள்ளது போல் தோன்றுகிறது. புலம் பெயர்ந்த மக்கள் தங்கள் மத அடையாளங்களை நிலை நிறுத்திக் கொள்ள காட்டிய ஆர்வத்தை தாங்கள் சார்ந்த நாடுகளிலும் உலக அரங்கிலும் ஈழத்துப் பிரச்சினையை இன்னும் முன்னிலைப்படுத்தியிருக்க வேண்டும்.மாறாக உணர்ச்சிவசப்படுபவர்களாகவும்
தாங்கள் சார்ந்த வாழ்க்கையின் அழுத்தத்தில் மறைந்து போனவர்களாகவும் காணப் படுகிறார்கள்.

இலங்கை அரசின் வேர்கள் இந்துப் பத்திரிகை ராம் போன்றவர்களிடம் வேறூன்றியது போல் ஈழத்தமிழர்கள் ஊடக நிலையிலும் மொழி சார்ந்த நிலைக்கு அப்பால் போகவில்லை.தமிழ்நெட் போன்ற வலைத்தளங்கள் ஓரளவுக்கு திருப்திகரமாக இருந்தாலும் எழுத்தும் கருத்து பரிமாறல்களுமின்றி செய்திகளை வெளியிடுகின்றது.இலங்கை விசயத்தில் ஓரளவுக்கு ஆங்கில ஊடகமான அவுட்லுக் இந்தியா மூலம் கருத்துக்கள் தருவது B.ராமன் மட்டுமே.காரமூட்டும் தெகல்கா சேலத்துக்குப் போய் குளத்தூர் மணீயையும் குளத்தூரையும் பற்றிச் சொல்லி விட்டு தற்போதைய மாற்றங்களை அலசாமல் போய்விட்டது.

சில பதிவுகளும்,பின்னூட்டங்களும் சின்னப்பிள்ளைத்தனமாக இருந்தாலும் நேர்,எதிர்வினைகள் தமிழ்மணத்தில் பிரச்சினையை அலச ஆராய முற்படுவது வரவேற்க தக்கது.அரசியல் அந்தர் பல்டிகளை தொடாமல் விட்டுச் செல்கிறேன்.


இனி இந்தியாப் பக்கம் வந்தால் இந்தியாவின் நிலைக்கு இரண்டு காரணங்கள் உள்ளன.ஒன்று பாகிஸ்தான்,சீனாவின் இலங்கையில் நிலை கொள்ளலைத் தவிர்ப்பது.அடுத்து ராஜிவ் காந்தியின் மரணம்.தற்போதைய தமிழகத்து எழுச்சி இதனையெல்லாம் புரட்டிப் போட்டுள்ளது. அடக்கப் படும் உணர்வுகள் புரட்சி செய்யும் என்பதற்கு ஈழத்துப் பிரச்சினையும் மொழியின் வேர் ஆழமானது என்பதற்கு தமிழக மாற்றங்களும் உதாரணங்கள்.எனவே இனி இந்திய இலங்கை வெளியுறவுக் கொள்கையை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்து மாற்றங்கள் கொண்டு வரவேண்டிய நிலைக்கு இந்திய வெளியுறவுக் கொள்கை தள்ளப்பட்டிருக்கிறது.

ஈழத்துப்பிரச்சினையில் ஈழத்து தமிழனுக்கு குரல் கொடுப்பவன் கவிஞனாகவும் , ஒரு படைப்பாளியுமாய் இருக்கிறான்.படைப்பும் கவிதையுமே நிலைத்து நிற்கும் நிலை போக படைப்பாளியின் தனிப் பக்கங்களும் இனிப் பேசப்படும் நிலையில் தற்போதைய சிறைவாசங்கள்.இவையெல்லாம் ஈழத்துக்கு வலு சேர்க்கவே செய்யும்.இயக்குனர்கள் அமீரும்,சீமானும் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் புகுந்துவிட்டார்கள் இந்தக் கைதின் மூலமாக.

மனிதாபிமான அடிப்படையிலாவது துன்புறும் ஈழத்து மக்களுக்கு வேண்டிய முக்கியப் பொருட்கள் செல்வதற்கு இந்தியா நேரடியாகவோ அல்லது நார்வே,ஐக்கிய அமைப்புக்கள் போன்றவைகளுக்கு முன்னுரிமை தந்தோ செயல்பட வேண்டும்.ஈழத்து தமிழர்களின் உடமைகளும்,வாழ்விடங்களும் அவர்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும்.முக்கியமாக ஈழத்தமிழர்களின் எதிர்காலத்தை ஜனநாயக முறைப் படி எந்த ஒரு அழுத்தங்களுக்கும் உட்படுத்தாமல் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமையை வழங்குவது முக்கியம்.அதற்கான முயற்சிக்கு இந்தியா துணை போனால் இந்தியாவின் சொந்த நலன்களுக்கு நல்லது.

Friday, October 24, 2008

விமர்சனத்துக்கும் அப்பால்


வணக்கம் அனைவருக்கும்.

சிரிப்பையும் விமர்சனத்தையும் பார்வையாளர்களுக்கு விட்டு விடுகிறேன்.

படத்தில் இடது புறம் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் வலதுபுறம் இலங்கை பிரதமர் ராஜ பக்ஸே.


படம் சுட்ட இடம்:

http://www.bbc.co.uk/tamil/news/story/2008/07/000000_currentaffairs.shtml

Wednesday, October 15, 2008

அக்டோபர் மாதம் விளம்பரப் படப் போட்டி


அனைவருக்கும் வணக்கம்.

பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமிடக் கூட நேரமில்லாமல் வேலை,வீடு,புதிய வலைத் தளம் முயற்சியென தலைக்குள் பல சிந்தனைகள்.என்னைப் பொறுத்தவரை தமிழ் மணத்தை நேரம் கிடைக்கும்போது தொட்டுப் பார்த்துக் கொண்டாலும் பதிவு எழுத தூண்டும் உந்துதல் பிட் பட வல்லுனர்களின் மாதாந்திர அறிவிப்புக்கள்தான். எனவே அக்டோபர் மாதம் ஒரு பதிவு.

கூடவே இந்த நேரத்தில் எனது வலைத்தளம் பற்றி அறிவிக்க வேண்டிய கட்டாயமாக சி.வி.ஆர்,ஆனந்த் ,நாதஸ் போன்றவர்களின் அன்பளிப்பு படங்கள் வலைத்தளத்தின் கடைசி பக்கத்தை அழகு படுத்த வைத்துள்ளது.பக்கங்களை மொட்டையாக வைக்கவேண்டாமே என எனது சில படங்களை தற்காலிகமாக ஒட்ட வைத்துள்ளேன்.

எனது வலைத்தளத்தின் பெயர் www.photocbe.com. நான் கோயம்புத்தூர்காரன் என்பதால் எங்க ஊர்ப்பக்கம் ஊரை cbe என அழைப்பதாலும் Photo concept business expression என அர்த்தத்தில் அந்தப் பெயர்.காமிராக் காதலாலும் ,நண்பர் வட்ட படங்களின் பிரமிப்புக்களை வாங்கிக் கொள்ளவும் கூடவே விளம்பரம்,வியாபார உத்திகளை கையாளும் நோக்கிலும் உருவானது இந்த வலைத்தளம்.குவைத் தொடர்பான எந்த விளம்பர படங்களும் தமிழ் மண பதிவர்களுக்கும்,பிட் வருகையாளர்களுக்கும் இலவசம். நிறைய பேரின் பதிவுகளை மேய்ந்து இமெயில் கிடைக்காததால் யாருக்கும் தனிக் கடிதம் போடவில்லை.எனவே இந்த பதிவின் மூலம் யாராவது படங்கள் அனுப்ப விருப்பப் பட்டால் விருப்பங்களைத் தெரிவிக்கவும்.கூடவே வலைத்தளம் போய் பிட் தலைகளின் அசத்தல் படங்களையாவது பார்வையிடவும். வலைத்தளம் திறக்க Flash அவசியம்.இது இன்னும் துவக்க நிலையிலேயே உள்ளது. படங்கள் இன்னும் வரும்.


இந்த மாத பிட் விளம்பர பெயருக்கு ஏற்ற மாதிரி இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சமையல் உப்பு, அதே சமயத்தில் இதய பாதுகாப்புக்கான குறைந்த சோடியம் உள்ள ஒரு தயாரிப்பை இங்கே வணிகப் படுத்த வந்ததை விளம்பரப் படுத்துகிறேன்.கருத்துக்கள் கூறவும். மீண்டும் நன்றி அனைவருக்கும்.