Followers

Sunday, May 31, 2009

கமலா தாஸ்

கமலா தாஸ் என்ற கவிதாயினியும் எழுத்தாளரும் கமலா சுரய்யா ஆனது எப்படி என்பதற்கான கேள்வியும் வாழ்வியல் அழகின் உச்சத்தை தொட்ட பல பிரபலங்களும் இஸ்லாமிய மதத்தை தழுவுவதற்கான காரணம் என்ன என்பதும் ஆராய வேண்டியவை.ஆனால் பதிவு அதைப் பற்றியது அல்ல.தொலைகாட்சி பெட்டி ரிமோட்டை கிள்ளிய போது கமலாதாஸின் நேர்காணல் மலையாள மக்கள் தொலைக்காட்சியில் (People) நிகழ்ந்து கொண்டிருந்தது.ஓர் பெண் குழந்தையாக,பதின்ம வயதுப் பெண்ணாக ,திருமண வயதுடையவளாக ,வாழ்வியலைப் புரிந்தவளாக,முதுமையின் அழகில் அமர்ந்தவளாக ஒரு முழுப் பெண்ணின் வாழ்க்கையை இல்லறத்தோடும்,இலக்கியத்தோடும் வாழ்ந்து முடித்திருக்கிறார் கமலாதாஸ்.

நான் மலை,ஆறு,குளம்,மரம்,செடி,மலர்கள் என்று கவிதை பாடி சுற்றித்திரிந்த காலம் வசந்தகாலம் என்று நேர்காணலில் குறிப்பிட்டார்.இவரை இந்தியப் பத்திரிகை ஊடகங்களுக்கு புயல் மாதிரி அறிமுகப் படுத்தியது 70பதுகளில் எண்ட கதா என்ற சுய சரிதை.Men are pretend to be shocked when reading என்ற கமலாதாஸ் எனது சுய சரிதையில் எனது ஆத்மாவை தேடாமல் எனது உடலின் மொழிகளை மட்டுமே வாசிப்பாளர்கள் தேடினார்கள் என்று ஒரு முறை குறிப்பிட்டிருந்தார்.அனைத்துப் பெண்களும் கதைகள்,கட்டுரைகள் மட்டுமே எழுதிய காலத்தில் கவிதையை காதலித்த ஒரே பெண் கமலாதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்ப கட்டுக்கும் அப்பாற்பட்டு தான் காதற் வயப்பட்ட ஆண்களை பெயர்கள் கூறாமல் விவரித்தார்.உதாரணத்திற்கு, தனக்கு சமஸ்கிருதம் தெரியாமல் சமஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தவர் மீது ஈர்ப்பு வந்தது என்றார்.(Kate winslet நடித்த 2008 ன் ஆஸ்கார் சிறந்த நடிகைக்கான பரிசாக The Reader என்ற திரைப்படம் மனதில் வந்து போனது).

தனக்கு எப்பொழுதும் உயரமான ஆண்களையே பிடிக்குமென்றும் ஒரு முறை கலந்து கொண்ட விருந்தில் குள்ளமாக ஒருவர் வந்து தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டு பேச்சின் இடையில் சொன்ன சரமாரியான கவிதைகளால் அவர் மீது அன்பு கொண்டதும் குறிப்பிட்டார்.அவரது கணவர் தாஸ் "Meet my wife Poet Kamala Das" என்று நண்பர்களுக்கு கௌரவ அறிமுகம் செய்து வைத்ததை பெருமிதத்தோடும் குறிப்பிட்டார்.

விருந்துகள் பற்றியும் மது அருந்துதல் பற்றியும் குறிப்பிடும் போது தான் ஏன் மது அருந்துகிறேன் என்றும் விருந்துகளில் மது அருந்துவது எப்படி என்பதற்காகவுமே அருந்துவதாகவும் ஜெயகாந்தன் எங்கோ குறிப்பிட்டது நினைவுக்கு வந்து போனது.மது அருந்துவதை மேற்கத்தியவர்களிடம் கற்றுக் கொண்டதாகவும் 1 பெக் அல்லது 2 பெக் மட்டுமே அளவு என்றும் இந்தியர்கள் பாட்டிலின் இறுதி சொட்டு வரை குடிப்பதை நிறுத்துவதுமில்லையென்றும் சொன்னார்.

தனக்கு அறிமுகமான பரந்த நட்பு வட்டாரத்தையும் எழுத்தாளர்கள்,நாடகவியளர்,மார்க்சீய சிந்தனைவாதிகள்,கவிஞர்கள் என்று அனைவரையும் நினைவு கூர்ந்தார்.வீட்டில் நாடகக்குழுக்களாய் 100 பேருக்கு மேல் கலந்து உரையாடித் திரிந்ததை நினைவு கூர்ந்தார்.தனது கணவரின் வங்கி பதவிக்கான காலம் முடிந்து வருமானத்திற்காக வேண்டி columnist ஆக எழுதி குழந்தைகளையும் குடும்பத்தையும் நடத்த வேண்டியது பற்றி சொன்னார்.

ஒரு பெண்ணாக எழுத்தாளராக ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்துள்ளதாகவும் தனது இறுதி நாட்களை தன்னை எப்படி அடக்கம் செய்யவேண்டும் என எழுதி வைத்திருப்பதாகவும் கிருஷ்ணனைப் பற்றிக் கவிதை எழுதிக் கொண்டே இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்ட கமலா தாஸ் என்ற கமலா சுரய்யா எழுத்தாளர் போலி சமூக கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து பெண்ணியம் பற்றிய ஆண் வர்க்கத்துப் பார்வையை புரட்டிப் போட்டு வாழ்வியலை நிறைவு செய்துள்ளார்.

நேர்காணலை நிறைவு செய்யும் போது நேர்காணல் என்பதை மறந்த அவரது நினைவுகளின் நாட்களில் மூழ்கியிருந்தது நீண்ட பேச்சின் தொனியில் தெரிந்தது.

இந்தப் பதிவு அவரது எழுத்துக்கும் சமூகத்தில் தனக்குப் பிடித்த கவிதை,எழுத்து,வாழ்க்கை என்று சமரசம் செய்து கொள்ளாத போலியற்ற வாழ்க்கைக்கும் சமர்ப்பணம்.

ஸ்டாலின் vs அழகிரி

நீண்ட காலமாய் தொடர்ந்து அரசியலில் தனது நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ள ஸ்டாலின் தி.மு.க வின் வாரிசு அரசியலுக்கும் சட்ட அமைப்பில் இடம் இருந்தால் கருணாநிதியின் காலத்திலேயே முதல்வராவதற்கும் தி.மு.க சார்பில் முழு தகுதியுடையவரே.அதற்கான வெள்ளோட்டமாக முன்பே இளைஞரணி ஊர்வல மகுடம் சூட்டப்பட்டும் உள்ளது.எனவே கலைஞர் கருணாநிதி தனது வயதின் இயலாமையால் ஓய்வெடுக்க விரும்பினால் ஸ்டாலின் அரியணையேறுவதும் சரியே.

இதுவரை தமிழக வரலாற்றில் துணை முதல்வர் பதவி உருவாகியிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.அப்படி உருவாகியிருந்தால் அந்த மரபு வழியில் துணைமுதல்வர் பதவியில் தவறில்லை.அப்படியில்லாமல் இது புதுக்கலாச்சாரமாக தமிழகத்தில் முதல்வரின் மகன் என்ற முறையில் உருவாகுகின்றது என்றால் இந்தப் பதவி விமர்சனத்துக்குரியது.அதே வேளையில் கவர்னர் இதனை அங்கீகரித்திருப்பதும் இதில் சட்டத்திற்கு இடமிருக்கிறதென்றும் கருதவேண்டியிருக்கிறது.எனவே ஸ்டாலினின் நீண்ட அரசியல் வாழ்வில் பதவி உயர்வு என்பதை எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம் என்பதை உங்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் பயனுடையதாகும்.

கருணாநிதியின் குடும்ப அரசியலுக்கும் மதுரை கலாச்சாரத்துக்கு முத்திரையாகவும் பணத்தால் ஓட்டுக்களை வாங்கி ஜெயித்து விட முடியும் என்று நிரூபண அரசியலுக்கும் உருவாய் வந்துள்ளார் மத்திய அமைச்சர் அழகிரி.தனிமனிதனாக இவர் நல்லவனாகவும் அதன் காரணமாகக் கூட மதுரை இவர் வசம் வந்திருக்கலாம்.அது ஊடகங்களில் முன்னிறுத்தப் படாமல் போயிருக்கலாம்.ஆனால் அழகிரி என்றவுடன் ஆட்டோ என்ற முத்திரை எப்படி வந்தது எனத் தெரியவில்லை.இது அவரது தனிக் குணநலன்களா அல்லது மதுரை என்றவுடன் நினைவுக்கு வருவது இன்றைய தமிழக சினிமாவின் வளர்ச்சிக்கு ஆற்றிய பெரும்பங்கும் கலையின் மேல் உணர்ச்சி வசமான காதலும் அரிவாள் கலாச்சாரத்தின் ஊற்றாக மதுரை விளங்குவதும் அழகிரியின் தனிக்குணமாக மாற்றப்பட்டிருக்கலாம்.

நேற்று அபிஅப்பாவின் விமானத்தை தவறவிட்ட தமிழக மாணவர்களுக்கு அழகிரி உதவியதாக சூடான இடுகை காண நேர்ந்தது.மக்கள் மனோபாவங்கள் ஒருவரின் பொய்த்தோற்றங்கள் எப்படி கட்டமைக்கப் படுகின்றன என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் அந்த இடுகை.டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் காலம் காலமாக எத்தனையோ தனிமனிதர்களாலும் தமிழக மத்திய அமைச்சர்களாலும் ஊடகத்தின் வெளிச்சத்துக்கு வராத எத்தனையோ நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கலாம்.ஆனால் பெயர் தெரிந்த ஒரு தனிமனிதனுடைய முகத்துக்குப் பின் இருக்கும் பலவீனங்கள் நிறை குறைகளை எடை போடாமல் துதிபாடும் துவக்க விழா நடத்துவது பலவிதமான பரிமாண எழுத்துக்களை பார்வையிடும் பதிவர்களுக்கு நல்லதா?

இடுகைகளிலும் இணைய திரட்டிகளிலும் பகுத்தறியும் சந்தர்ப்பங்கள் அமைபவர்களே ஓரப்பார்வை பார்க்கும் போது அன்றாட பிரச்சினைகளில் அல்லல் பட்டு வீட்டுக்கு வந்தால் திரைப்படமும் சீரியலும்தான் உலக நிகழ்வுகள் என காட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நுகர்வோர்களை குறை சொல்வதிலும் அவர்கள் மீது தேர்தல் தோல்விகளின் கோபங்களை காண்பிப்பதிலும் என்ன நியாயம் இருக்க முடியும்?

அமைச்சர் அழகிரியின் செயல்திறனை விமர்சிப்பதற்கும் ஏனைய தமிழக அமைச்சர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதற்கும் முதல் 100 நாட்கள் என்ற அமரிக்க அரசியலை இந்தியாவும் கடன் வாங்கிய நாட்களுக்குள் கணிக்கலாம்.

டிஸ்கி: எந்த தனிமனித விருப்பு வெறுப்புக்களுக்கும் கட்சிகளுக்கும் அப்பாற்பட்ட இடுகை.

Friday, May 29, 2009

Modern Holocaust - மே 2009ன் மீள் பதிவு

தெற்காசியாவின் மூலையில் மிதந்து கிடந்த இலங்கை தீவை பிரபாகரன் உலகின் வரைபடத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். போரின் இறுதி நாட்களின் அவலங்களையும்,மர்ம முடிச்சுகளின் உண்மைகளையும் தமது காரண காரியங்களுக்காக மறைத்தோ பொய்களினால் நிரப்பி விடும் அபாயம் தொடர்கிறது.இன்னும் உலக ஊடகங்கள் அனுமதிக்காத நிலையிலும் அங்கொன்றும் இங்கொன்றும் உண்மை தன்னை முகம் காட்டிக் கொண்டுள்ளது.இதில் சோகம் என்னவென்றால் சில மைல் தூரங்களில் நின்று கொண்டு தமிழகம் உதவ இயலாமல் மௌனம் காப்பது.

உலகப் போரின் ஹிட்லரின் கொடுமைக்கு சாட்சியாய்


இலங்கைப் போரின் ராஜபக்சேவின் கொடுமைக்கு சாட்சியாய்


எல்லாம் முடிந்து விட்டது என்று பறை சாற்றிக் கொள்ளும் இலங்கை அரசு புதிய அரசியல் தீர்வுகளுக்கான நம்பிக்கையைத் தராமல் மக்களை முட் வேலிகளுக்குள் அமர்த்தி மனித உரிமை ஓட்டெடுப்பிலும் வெற்றி முகம் காட்டுகிறது.இதுவரை காலனிக்காரனாய் இருந்தவர்கள் ஓரளவுக்காவது மனிதநேயம் பற்றிய அனுதாபம் காட்டுவது தெரிகிறது.சுதந்திரம் பேசிய மார்க்சீய நாடுகள் தங்கள் சுய முகங்களை காட்டியிருக்கின்றன.

மேற்கத்திய நாடுகளாய் ஐரோப்பா மற்றும் அமெரிக்க பத்திரிகைகள் மெல்ல உண்மைகளைப் பேச ஆரம்பித்திருக்கிறது.இவை இலங்கை அரசின் சுயமுகத்தை உரித்துக் காட்டும் என நம்புவோம்.இதிலும் Bruce Fein கொண்டு வரும் நீதிமன்ற வழக்கிலும் கூட இலங்கை அரசு ஜெயித்து விடும் சாத்தியம் இருக்கலாம்.ஆனால் பூகோளமாய் தனக்குத் தானே தனது இறையாண்மையை பாகிஸ்தான்,சீனா,இந்தியா என்ற மூன்று துருப்புச் சீட்டுகளிலும் போரில் அடகு வைத்து விட்டது.இதிலும் கூட மூன்று சீட்டுக்காரனாய் கால நிலைக்குத் தக்கபடி கண்ணாமூச்சி ஆடலாம்.ஆனால் பக்கத்து கரையாய் தமிழகம் காத்திருக்கிறது இன்று அரசியல் காரணங்களுக்காக தோல்விகளால் துவண்டு போன போதிலும்.இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விசயம் காங்கிரஸ் தவிர தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஈழம் குறித்த மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை தேர்தல் அரசியல் நிலைப்பாடுகளால் பிரிந்து நிற்கும் சோகம் நினைவுக்கு வருவதைத் தவிர. மாநிலப் பிரச்சினைகளில் கருத்து வேறுபாடும் வெளியுறவு கொள்கையில் ஒருமித்த கருத்தும் என இரு வேறு நிலைபாடுகள் நமக்கு அவசியம்.நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலகச் சூழல்,தமிழக அரசியல் சூழல் மாறும் காலம் வந்து கொண்டிருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.

உண்மையான தூரப்பார்வை அரசியல் இருக்குமானால் இலங்கை அரசு தனக்குத் தானே சூழல்களை பாதகமாக மாற்றிக் கொள்வதை விட மக்களை தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தட்டும்.நிலத்தில் உழைத்தும்,மீன் பிடித்தும் தனது வீட்டை இருக்கும் மரம்,பனைகளை வைத்து மீள் கட்டிக் கொள்வார்கள்.அதற்குப் பின் அவர்களை சக மனிதர்களாக நடத்துவதும் இரண்டாம் தரக் குடிமகனாய் மீண்டும் மாற்றுவதும் பற்றி யோசிக்கட்டும்.இவைகள் எல்லாம் நிகழாத பட்சத்தில் மக்களின் எதிர்காலம் குறித்த பார்வையில் ஒருமித்த கருத்துக் கொண்ட புதிய அரசியல் அமைப்பு தோன்றுவது அவசியமாகிறது.அது தாய் மண்ணுக்குள்ளா அல்லது புலம் பெயர்ந்தா என தீர்மானிக்க வேண்டியவர்கள் மண்ணின் மைந்தர்களே.

படங்கள் கொண்டு வந்த இடங்கள்

1)http://history1900s.about.com/library/holocaust/blpictures.htm

2) சயந்தனின் துயரப் பதிவு : http://sajeek.com/?p=263

Wednesday, May 27, 2009

செஞ்சிலுவை சங்கம்

குஜராத் பூகம்பத்திற்கு அள்ளிக் கொடுத்த தமிழகம்,கார்கிலுக்கு குரல் கொடுத்த தமிழகம் கடல் எல்லைக்கு சில மைல் தூரத்திலிருக்கும் தமிழனுக்கு குரல் கொடுத்து மட்டும் நின்று விட்டோம்.போரில் அனைத்தும் இழந்த மக்களுக்கு உதவும் விதமாக நம்மால் ஏதாவது செய்யவேண்டும்.உதவிகளை ஏற்றுக் கொள்ள செஞ்சிலுவை சங்கம் தனது கரங்களை நீட்டி வரவேற்க தயாராக உள்ளது.

இப்போதைய தேவை நீர்,உணவு,உடை,இருக்க இடம்,மருந்து,மருத்துவம்.இதற்காக வேண்டி தமிழகம் எப்படியாவது உதவி செய்தாக வேண்டும்.சேர,சோழ,பாண்டியர்களின் பெருமை பேச நிறைய இருந்தாலும் ஒற்றுமையில்லா உறவுகள் மாதிரி இப்போதும் கொள்ளுப்பேரன்களாய் பல கட்சிகளாய் தோன்றி நவீனம் நம்மை சுற்றி இறுக்கும் கயிறுகளின் மென் அழுத்தங்களின் வலிகள் தெரியாமல் பிரிந்து கிடக்கிறோம்.

போரின் அவலங்களுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவும் விதமாக கலைஞர் தலைமையில் கலைஞரின் சுயநல விமர்சனங்களை
தள்ளி வைத்து அணி சேர்வோம்.காரணம் தற்போதைய சூழலில் போரால் அவதியுறும் மக்களுக்கு அரசாங்க பூர்வமாகவும்,அங்கீகாரத்துடனும் அதே சமயத்தில் வன்னி மக்களுக்குப் போய்ச் சேர்க்க வேண்டிய சக்தியும் கடமையும் அவரிடம் மட்டுமே உள்ளது. ஹைதர் அலி காலத்து (40 வருடம்) அலி என்னும் கப்பல் உதவிக்கு வர தயாராக இருக்கும் போது கப்பல் ஓட்டிய தமிழன் பேருக்கு தமிழகமும் மனிதாபிமானத்துடனாவது உதவட்டும்.(கடல் என்ற கருவி இதுவரை நமக்கு பாதுகாப்பு என்ற நிலை போய் இப்பொழுது எதிரியா நண்பனா என்ற விவாதத்தை எழுப்புகிறது.)

திரைப்படம் சார்ந்தவர்கள்,நட்பு நிலையில் நிற்கும் திருமா,கனிமொழி போன்றவர்கள் செஞ்சிலுவை முயற்சியாக கலைஞரை அணுகலாம்.

It's a hard nut to crack but can be achieved.Hope helping cannot be visualized as interfering into a country's sovereignty.

Tuesday, May 26, 2009

இனி மனிதம் மட்டுமே பேசுவோம்

போர்களினால் இடம்பெயர்ந்த எந்த மக்களும் பல திசை நோக்கியே பயணித்திருக்கிறார்கள்.ஒரு திசை நோக்கி நகர்ந்த மனித நகர்வுகள் என்று யோசித்தால் எனக்குத் தெரிந்து பைபிளின் மோசஸ் பின்னால் கடலுக்கு அருகே சென்ற இஸ்ரேல் வம்சத்தாரும் பிரபாகரன் பெயரால் நதிக்கரை நகர்ந்த ஈழத்து தமிழ் மக்கள் மட்டுமே.இரண்டுக்குமே கடல்கள் சாட்சி சொன்ன,சொல்லும் நிகழ்வுகள்.முந்தைய சரித்திரத்தை மெய்ப்பிக்கவென்றே இன்றும் பிரமிடுகள் அசையாமல் நின்று கொண்டிருக்கின்றன.இப்போதைய சரித்திரத்தையும் சாட்சிக்கு அழைக்கவென்றோ என்னவோ திருவள்ளுவன் சிலையாக நின்று கொண்டிருக்கிறான்.

இன்றைய மனிதர்களும் அவர்களைச் சார்ந்த நிகழ்வுகளும் கால ஓட்டத்தில் மறைந்து விடும்.ஆனால் வரலாறு நிகழ்வுகளை தன்னிடத்தே தக்க வைத்துக்கொள்ளும்.மக்கள் வேறு,புலிகள் வேறு என்ற கூற்றுக்கள் எல்லாம் இறுதிப் போரின் அவலங்களில் பொய்யாகிப் போய் இருக்கின்றன.போரின் வெற்றிகள் இலங்கைக்கு பலத்தையும் அதன் தெற்கு திசையில் கொண்டாட்டங்களையும் தருகிறது.சிங்கள மக்களின் கொண்டாட்டங்களை விமர்சிப்பது தவறு.அது இனம் சார்ந்த, மண் சார்ந்த மனித இயல்பு.ஆனால் நாம் விமர்சிக்க வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளன.

போருக்கும் அப்பால் தமிழர்களுக்கான தீர்வாக இலங்கை அரசு எந்த தீர்வை உலகின் முன் வைக்கிறது?அப்படி வைக்கும் தீர்வுகள் எல்லாருக்கும் உடன்பாடு உள்ளதாக இருக்குமா?இப்போது நிகழும் புலம்பெயர்ந்த மக்களின் போராட்டங்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன?இவர்களுக்கான எதிர்காலத்தை எப்படி முன்வைக்கப்போகிறது?புலிகள் பயங்கரவாதிகள் என்று சொல்லியே பயங்கரவாதியாகிப் போன இலங்கை அரசு தமிழர் மனதால் பட்ட காயங்களை எப்படி ஆற்றப் போகின்றது?இல்லை இவை காயங்கள் அல்ல வெறும் கீறல்களே என்று கருணா சாட்சியம் சொல்ல வருவாரா?

இலங்கை அரசுக்கு தன்னை நிரூபித்துக் கொள்ளவும் அப்பாவி மக்களின் துயரங்களைப் போக்கவும் உடனே செய்ய வேண்டியது பொதுமக்களை தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்துவதே.அது தவிர்த்து ஸ்கிரீனிங்க் என்பது இருக்கும் மனிதர்களை இல்லாமல் செய்வதற்குரிய உள்நோக்கமாகவே இருக்கும்.அமெரிக்கா செய்ததையே நானும் செய்கிறேன் என்று சொல்லும் இலங்கை அரசுக்கு அமெரிக்கா மாட்டுக்கொட்டில்களாய் எங்கும் மனிதர்களை முட்கம்பிக்குள்ளும் கூடாரங்களிலும் அடைத்து வைக்கவில்லை.

மடியில் கனமில்லை பயமில்லையென்றால் அனைத்துலக ஊடகங்களையும் சுதந்திரமாக அனுமதிக்கட்டும்.முன்புதான் ஊடகவியளாலர்களின் உயிருக்கு உத்தரவாதம் தர இயலாது.இப்போதைய தடைக்கான அவசியம் என்ன?உண்மைகள் இலங்கை அரசு சார்பாக இருந்தாலும் உலகின் முன் தெரியட்டும்.

இதுவரை பாலஸ்தீனியன் மாதிரி இருந்த ஈழத்தமிழன் அவனையறியாமலேயே யூதனாகிப் போனான்.ஈழத்தமிழா!மனிதம் பேசு.அறிவும்,திறமையும்,வீரமும்,பொருளும் உனக்குள்ளே நிறைந்து கிடக்கிறது.(இது புகழ்ச்சிக்கான வார்த்தை இல்லை இரு மொழியின் வரலாறுகள் இப்போதே கண்முன்)

ஒன்று சேர்.கட்டமைப்பு நடத்து.கதைகளை,கனவுகளை,புலம்பல்களை அகற்று.உலக நண்பர்களைச் சேர்.நிதர்சனம் காண்.வரும் சந்ததிக்கு நல்வாழ்வினை மாற்று.

(கடலுக்கும் அப்பால் இருக்கும் சகோதரத் தமிழனுக்கு உனக்காக வேண்டி குரல் மட்டுமே எழுப்ப முடியும்.கோஷங்களே வாழ்க்கையாகிப் போன எங்களுக்கு இது மட்டுமே சாத்தியம்.ஆனாலும் இந்த நீண்ட கோஷங்கள் மட்டுமே உனக்கு இழந்த வாழ்க்கையை மீட்டுத்தரும்.)

Thursday, May 14, 2009

போர் நிறுத்தம் செய் - ஒபாமா

பல மக்களின் பட்டினி,மனித உயிர்ப்பலியென இலங்கை அரசின் இனப்படுகொலைகளின் உச்சத்தில் ஈழ மக்களின் அவலங்கள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை எட்டியிருக்கிறது.மாறுதலுக்கான குரலாக வெள்ளை மாளிகைக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் குரல் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது.

தமிழகத்திலிருந்து தமிழனாக நாம் குரல் எழுப்பியும் (எதிர் குரல் எழுப்பியும்) இது வரை ஆக்க பூர்வமாக ஒன்றும் செய்ய இயலவில்லை.ஆனாலும் குரல் எழுப்பும் தமிழா!துவண்டு விடாதே!ஈழக் கனவு இப்பொழுதுதான் சரியான பாதையை நோக்கி நடைபோடுகிறது. இந்தியத் தேர்தலில் தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் எப்படியிருந்த போதிலும் ஈழ மக்களின் அவலங்களை நீக்கும் தகுதியையும் ஆளுமையையும் இந்தியா வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்து தகுதி இழந்து விட்டது இன்னும் சில நாட்கள் ஆட்சி செய்யும் அரசால். ஈழம் புலம் பெயர் மக்களின் குரலால் மேற்கத்திய நாடுகளின் மனிதாபிமானக் குரலுக்கு ஏங்கி நிற்கிறது. ஒபாமா போன்ற மாறுதல் கோட்பாட்டில் நம்பிக்கையுள்ள மனிதர்களிடமிருந்து நம்பிக்கைகளை எதிர்பார்க்கலாம்.

அமெரிக்காவே
யுத்தத்திற்காய் நேற்று ஓர் போய் செய்தாய்
மனிதாபிமானத்திற்கு இன்று ஒரு குரல் கொடு

நேற்று புஷ்க்கு போர் பிடித்தது
இன்று ஒபாமாவுக்கு
மனிதநேயம் பிடிக்கட்டும்.

மனித நேயம் காட்ட எலும்பும் தோலுமாய்
ஈழத்தமிழன் கையேந்துகிறான்.

போர் நிறுத்தம் செய்.

ஒபாவின் குரல் காணொளி தகவலுக்கு
http://enathu-pathivukal.blogspot.com/2009/05/blog-post_13.html#comment-form

இடுகைக்கான ஆக்கத்தை தந்த பதிவுகள் பதிவருக்கு எனது நன்றி.

Wednesday, May 13, 2009

நீங்க மட்டும்தான் யோசிப்பீங்களோ

கூட்டமா கூடிகிட்டேமிங்கிறாங்க!பேசிகிட்டோமிங்கிறாங்க!அதுவும் யோசிக்கிற மாதிரி படமும் புடிச்சிகிட்டேங்கிறாங்க.உங்களுக்கு மட்டும்தான் யோசிக்க (போஸ்) வருமா என்ன:)


இந்திய ஜனநாயகத் தேர்தல்

உலகிலேயே மனித சாதனையாக பல கண்டுபிடிப்புக்களும்,ஏனைய கோளங்களுக்குப் பயணிக்க மனிதன் முயன்றதாக இருந்தாலும் மிக மிகப் பெரிய சாதனையாக மனித சுதந்திரம் என்ற உன்னதமான கோட்பாட்டுக்கும் மனித நலன்களுக்கும் சென்றடையும் வழியாக அமைந்தது ஜனநாயகமும் ஜனநாயகத் தேர்தலுமே.மனிதன் சமமாக வாழ வேண்டும் என்ற மார்க்சீய சித்தாந்தங்கள் எவ்வளவு உயர்ந்தவையாக இருந்தபோதும் ஜனநாயக தத்துவங்களுக்கு முன் அவை தோல்வியையே தழுவியுள்ளது.பரிட்சார்த்தம் செய்த ரஷ்யாவும்,சீனாவும் மனித உரிமைகளை உலகிற்கு காண்பிக்காமல் இரும்புத்திரை போட்டு மூடி மறைக்கவே செய்தது.செய்கிறது.எனவே தற்போதைய சூழலில் மனிதன் தன்னைத் தானே நிர்வாகம் செய்து கொள்ளும் ஆட்சி முறைகளில் ஜனநாயகத்தை மிஞ்ச வேறு சித்தாந்தங்களே இல்லை இன்னுமொரு நல்ல புதிய சித்தாந்தம் பிறக்கும் வரை.

இனி பொதுவான இந்திய தேர்தல் பக்கம் தாவினால் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக தேர்தல் ஆணையம் இருப்பதும் அதன் மகத்தான சேவையை தனது அதிரடி நடவடிக்கைகளால் எந்த அரசியல் கட்சிக்கும் கட்டுப்படாமல் பொதுமக்கள் அறியத்தந்ததின் பெருமை முந்தைய தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனையே சாரும்.இந்திய ஜனநாயகத்தின் பக்கவிளைவுகளாக கள்ள ஓட்டு,தேர்தல் கலவரங்கள்,நக்ஸல் இயக்கம்,போராட்டங்கள்,தகராறுகள் இன்னும் பல இருந்தாலும் இவை அனைத்தையும் மீறி இந்தியா ஜனநாயகம்,தேர்தல் என்ற உலகின் மிகப் பெரிய நிகழ்வு மேலாண்மையை (Event management) நிகழ்த்திக் கொண்டிருப்பதில் இந்தியனாக அனைவரும் பெருமைப்படலாம்.தனது கோபங்கள்,இயலாமை போன்றவைகளுக்கும் கருத்து சுதந்திரம் என்ற வடிகாலைத் தந்திருக்கிறது ஜனநாயகம்.

பல்வேறு பரிமாணங்களின் கலவையில் சில தோல்விகள் மாதிரியும் விரக்தியும் கூட தோன்றலாம்.அரை நூற்றாண்டின் ஜனநாயக ஓட்டத்தில் மிகப்பெரிய ஜனத்தொகையின் கலப்பில் மொத்தக் கணிப்பில் நாம் வெற்றியே அடைந்திருக்கிறோம்.சில அரசியல் நிர்வாகத் திறமைகளில் தோல்விகளை அடைந்திருந்தாலும்,மனித மேம்பாட்டின் நலன்கள் அனைவருக்கும் போய்ச் சேரவில்லையென்றாலும்,பொருளாதார இருப்புக்கள் பதுக்கப்பட்டுப் போய் இருந்தாலும் ஜனநாயகம் என்ற கோட்பாடு நம்மை இன்னும் முன்னேறும் பாதையிலேயே தள்ளிக் கொண்டிருக்கிறது.

தேர்தலின் இறுதி நாளான இன்று வரையிலும் வாய் திறக்கும் அத்தனை கட்சிகளும் 40ம் எங்களுக்கே என்று சத்தமிடுகின்றன.சமீபத்து பதிவுகள் சில தி.மு.க கூட்டணி மற்றும் அ.தி.மு.க கூட்டணிக்கு முன்ன பின்ன பாதிக்கு பாதியா இடங்களைப் பிரித்துக் கொடுத்து விட்டார்கள்.இந்தக் கணிப்பு நடுநிலைமையா அல்லது களநிலவரங்களை ஆராய்ந்து எழுதுவதாலா அல்லது கொஞ்சம் கட்சி சார்பு கணக்குகள் போட்டுமா என்று தெரியவில்லை.

தொலைக்காட்சியில் பிரச்சாரக் கூட்டத்தைக் கண்டால் எல்லோரும் கூட்டம் சேர்ப்பதில் வல்லவர்கள் மாதிரியே சீன் காட்டுகிறார்கள்.மக்கள் வேடிக்கை பார்க்கும் கூட்டமோ என்றும் யோசிக்க வைக்கிறது.ஆனால் துண்டை தோளில் போட்டுகிட்டு உற்றுக் கவனிக்கும் மனிதன் அரசியலில் சோடை போனவனில்லை என்றும் கடந்து போன தேர்தல் முடிவுகளில் தெரிகிறது.கடந்த மாதங்கள் மொத்தக் கணிப்பாக பதிவுகளை நோக்கினால் கலைஞர் மேல் உள்ள கோபம் வெளிப்படை.திரைப்பட இயக்குநர்கள் இந்த முறை தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக தேர்தல் எதிர்ப்பு உணர்வுகளை நோக்கும் போது காங்கிரஸ் ஒரு இடத்திலும் தேறாது என்பது போலவே இருக்கிறது.ஆனாலும் 4 இடம் காங்கிரசுக்கு நிச்சயம் என்றும் பதிவு வருகிறது. கணிப்புக்களின் உண்மை நிலவரம்தான் என்ன?

தமிழகத்தில் ஈழம் பற்றிக் கொண்டிருக்கையில் தமிழக எல்லையைத் தாண்டி நோக்கினால் பாராளுமன்றம் தொங்குவது நிச்சயமாகிறது.உலக அரங்கில் மன்மோகன் சிங் பிரதமராக செயல்பட்டாலும் சோனியாவே நிழல் பிரதமர் என்பதும் இன்னும் சில மாநிலங்களின் நிலவரம் காங்கிரசுக்கு சாதகமில்லா நிலையிருப்பதாலும் அடுத்த ஆட்சிக்கு தேறுமா என்றும் சந்தேகத்தைக் கிளப்புகிறது.ஆனால் கூட்டல் கழித்தல் கூட்டணி முறையில் இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை. பி.ஜே.பி அல்லது மூன்றாவது அணி ஆட்சியைக் கைப்பற்றுமா?மூன்றாவது அணி உருவாகினால் ஆதரவு தரும் கட்சி மத்தியில் ஆட்சியைக் காலை வாரி நாற்காலி கனவு காண்பதற்கும் சாத்தியம் இருக்கிறது.

அலை ஓட்டு,விலை ஓட்டு,ஜாதி ஓட்டு,காசு ஓட்டு,கட்சிக்கு வாக்கப் பட்ட ஓட்டு,வர்க்க ஓட்டு,புடிச்சிகிட்டு போய் போட வச்ச ஓட்டு,கோப ஓட்டு,போடாத ஓட்டு,கிராம ஓட்டு,டவுன் ஓட்டு,சமய ஓட்டு,சமயம் சாரா ஓட்டு,பாராளும் கனவு ஓட்டு,பாராளுமன்றக் கனவு ஓட்டு,கூட்டணி ஓட்டு,கூட்டணியில்லா ஓட்டு,காரிய ஓட்டு,கள்ள ஓட்டு,நல்ல மனுசன் ஓட்டு,மேடைப்பேச்சு ஓட்டு,ஈழ ஓட்டு,படிச்ச ஓட்டு,படிக்காத ஓட்டு,பிரிக்கும் ஓட்டு,அம்மா ஓட்டு,அய்யா ஓட்டு,கலைஞர் ஓட்டு,கள்வன் ஓட்டு,சினம் ஓட்டு,சின்னம் தெரியா ஓட்டு,49 ஓ என்று எத்தனை வட்டங்களைத் தாண்டி வரவேண்டியிருக்கிறது வேட்பாளனும்,வாக்காளனும்.ஆழமாய் சிந்தித்தால் பிரமிப்பான விசயமே.

கடந்த கால இந்தியப் பொருளாதாரத்தை நிலை நிறுத்தியதில் கடலோடித் திரவியம் தேடும் இந்தியர்களின் பங்கும் உள்ளது.அதோடு கூட வாழ்க்கைப்பட்ட பூமிகளின் நல்ல பிரதிபலிப்புக்களும் கூட கடலோடிகளிடம் உள்ளது.கடல் கடந்த மனித வளங்களையும் ஓட்டு என்ற உரிமையை விரிவுபடுத்துவதிலும் இந்திய ஜனநாயகத் தேர்தல் இனி முயலவேண்டும்.போஸ்டல் ஓட்டு என்ற முறையிலிருந்து இப்பொழுது தொழில் நுட்ப ஓட்டுக்களாய் இந்திய அரசியலமைப்பு அனைத்து இந்தியர்களையும் இணைத்துக் கொள்வது அவசியம்.

இறுதியாக இணையங்களில் ஒலித்த தமீழீழ ஆதரவுக்கான குரல் இணையங்களைத் தொடாத மனங்களில் மொத்த தமிழ்மண்ணில் எப்படி ஒலிக்கும் என்ற ஆவலுடன் நிறைவு செய்கிறேன்.

Sunday, May 3, 2009

ராணுவ வாகன கோபங்கள்

ஆறு மாதங்களுக்கு முன்பே ஈழம் குறித்த தமிழக மாற்றங்கள் வந்து விட்டது.அப்போதைய கால கட்டத்தில் இலங்கை குறித்த இந்திய மாற்றங்களாகவே அவை மாறியிருக்க வேண்டும்.காரணம் இந்திய அரசு அப்போதே ஈழம் குறித்த தனது வெளிநாட்டுக் கொள்கையின் பார்வையை மறுபார்வை செய்திருக்க வேண்டும்.

6 மாத கால கட்டத்திற்குள் ஏற்பட்ட இந்திய இலங்கை நிகழ்வுகளை மறு அசைவு போட்டால் பதிவுகளில் வெளிப்படும் உண்மைகளுக்கும் இந்திய அரசு செயலாற்றும் முறைக்கும் கூடவே பொதுமனிதப் பார்வைக்கும் தூர இடைவெளிகள் அதிகம் என்ற ஐயமும் எழுகிறது.இணையத்தில் உட்காரும் கணங்களில் தோன்றும் உண்மைகள் இருதினங்கள் இணையம் பக்கம் வராமல் இருந்தால் கண்ணைக் காட்டி காட்டுக்குள் விட்டது போன்ற உணர்வையும் தோற்றுவிக்கிறது.கட்சி என்ற வட்டத்துக்குள் நுழைந்து விடுபவர்களுக்கு கட்சித் தலைமையின் செயலே வேத வாக்காகி விடுகிறது.ஆனால் தமிழ் உணர்வு கொண்டு இப்போதைக்கு தமிழகத்தில் நிகழும் போராட்ட உணர்வுகளை மத்திய அரசு கூர்ந்து கவனிக்கத் தவறியதும் பெரும் ஆபத்துக்களை வருங்காலத்தில் கொண்டு வருவதற்கு காங்கிரஸ் கட்சி வழிகோல்கிறதோ என்ற பயத்தையும் இப்போதைக்கு உருவாக்குகிறது.

மதச்சார்புகளை ஓரளவுக்கு சமன் செய்து காங்கிரஸ் ஆட்சி செய்கிறதென்றே இதுநாள் வரையிலான காங்கிரஸின் மதிப்பீடு இருந்தது.பி.ஜே.பி சோனியாவை அந்நிய நாட்டுக்காரி என்று பிரச்சாரம் செய்த கடந்த தேர்தலில் கூட தமிழ்நாட்டில் அப்படியொரு பார்வையோ அதற்கான தாக்கமோ இல்லாமல் இருந்தது.ஆனால் இன்றைய நிலையும் அதற்கான சூழல்களையும் யார் உருவாக்கியது?அரசியல் அனுதாபங்களும்,எதிர்ப்பும் ஜனநாயகத்தில் வரும் போகும்.

கார்கில் காலத்து தமிழக தேசப் பற்று எப்படியிருந்தது என்று எழுதவோ சொல்லவோ தேவையில்லை.பஞ்சாபிலும்,தமிழகத்திலும் ராணுவ வீரன் ஒரு மகத்தான மனிதன்.அந்த தேச உணர்வுகளுக்கும் நேற்று குழி தோண்டப் பட்டு விட்டது இராணுவ வாகனங்களை அடித்து நொறுக்கியும் ராணுவ வீரர்களை விரட்டியதன் மூலமும்.இராணுவ வாகனங்களை வழி மறித்தவர்களின் கூற்று வாகனங்களில் யுத்த தளவாடங்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்ப படுகிறதென்று.இல்லை,ராணுவ வீரர்கள் தங்களது ராணுவப் பயிற்சிகளை முடித்துக் கொண்டு திரும்பும் போதே இந்த மோதல் நிகழ்வு ஏற்பட்டது என்று மறுசாராரின் கூற்று.

கோவையின் கோபத்தின் மையம் தமிழர்களின் இனப் படுகொலையும்,முன்பு ரயில் வாகனங்களில் டாங்கிகள் வரிசையாக சென்றதும் அவை இந்தியாவிலிருந்து இலங்கை அரசுக்கு செல்கிறதென்ற செய்தியுமே.ஒருவேளை பொதுமக்களின் கோபங்கள்,நிகழ்வுகளின் புரிதல் தவறாக இருக்கும் பட்சத்தில் நாட்டின் நலன் கருதி செய்திகளையும்,நிகழ்வுகளின் உண்மைகளையும் மக்களுக்குப் புரிய வைப்பது மாநில,மத்திய அரசின் கடமையாகும்.இந்தியாவிலிருந்து இலங்கைக்கு Mr.மேனன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போகிறார்.பேச்சு வார்த்தையின் சாரத்தை அவரோ அல்லது அரசாங்கமோ பொதுமக்களுக்கு சொல்வதில்லை.அல்லது சொல்லவேண்டிய அவசியமில்லை என்ற Classified கோட்பாடு, இலங்கையில் ஊடக தடையையும் மீறி வெளிச்சத்துக்கு வரும் நிகழும் அவலங்களைக் காணும் தமிழக மக்களுக்கு மேலும் கோபத்தை உண்டுபண்ணுகிறது.

இந்தியாவையும்,தமிழகத்தையும் பொறுத்தவரை நிகழும் அரசியல் நிகழ்வுகள் சுகமாயில்லை.மக்களின் அரசு என்ற பொறுப்பிலிருந்து நிலை தடுமாறும் மாநில,மத்திய அரசுகள் மக்களுடன்,மக்களுக்காக என்ற கோட்பாட்டிலிருந்து பிரள்வது தமிழகத்தில் இன்னும் பல நிகழ்வுகளையும்,விளைவுகளையும் உருவாக்கும். காலம் தாழ்ந்து போய் விட்டாலும் அரசுகள் இன்னும் தூங்காமல் விழித்துக் கொள்வது இந்தியாவிற்கு நன்மை பயக்கும்.

பாதுகாப்பது யாருடைய பொறுப்பு?

திரு.(யோ.திருவள்ளுவர்) சார்லஸ் ஆன்டனிக்கு என்ற இடுகையை ஆங்கிலத்தில் தந்து விட்டு இதனை யாராவது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தால் நல்லது என்று கூறியிருந்தார்.மொழி வல்லுனர்கள் யாராவது ஆங்கிலத்தின் சாரத்தை தமிழில் மொழிபெயர்ப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.இதுவரை யாரும் முன்வராத காரணத்தாலும்,ஆங்கில மூலம் அழகாக இருந்ததாலும் ஆங்கில எழுத்துக்களை எனது புரிதலோடு தமிழ்படுத்துகிறேன்.ஆங்கில மூலம் வேண்டுபவர்கள் செல்ல வேண்டியது
http://www.worldsikhnews.com/22%20April%202009/Whose%20Responsibility%20is%20it%20to%20protect.htm

இலங்கையில் ஈழம் தமிழர்களின் சாவும் அவர்களது வாழ்ந்த மண்ணின் அழிவும் கண்டு அதன் தூண்டு கோலாக சீக்கிய எழுத்தாளர் ஜெக்மோகன் சிங் பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் ஆன்டனிக்கு ஒரு பகிரங்க கடிதமொன்று எழுத அமைந்தது.நாகரீக சமூகத்தின் அனைத்து நாட்டவர்கள் தமிழ் போராளிகளுக்கும்,மக்களுக்கும் தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டுகிறார் இந்த எழுத்தாளர். அவரது பகிரங்க கடிதம் கீழே:

அன்பின் சார்ல்ஸ் ஆன்டனி,

வாழ்வுக்கான போராட்டம்,தனித்துவம்,சுதந்திரப் போராட்டத்துக்கான எனது பங்களிப்பை தயவு செய்து பெற்றுக் கொள்ளவும்.

பஞ்சாப்புக்கான போராட்டத்தை அருகில் இருந்த பார்த்த சாட்சியின் காரணமாக நீங்களும் உங்கள் மக்களும் எதற்காக வாழ்வுக்கான ஒரு போரை நிகழ்த்துகிறீர்கள் என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஊடகங்களில் உங்கள் அப்பா-வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு நாள் நண்பன்,அடுத்த நாள் எதிரி.ஒரு நாள் அவர் பாதுகாக்கப்பட்டார்.இன்று அவர் தேடப்படுகிறார்.சிலருக்கு அவர் தீவிரவாதி.பலருக்கு அவர் பாதுகாவலன்.யார் அவர் என்பதை சரித்திரம் தீர்மானிப்பதற்கு விட்டு விடுவோம்.

நான் ஒரு போராளி இனத்தைச் சார்ந்தவன்.சீக்கியர்கள் போராளிகளை நண்பர்களாக பாவிக்கிறார்கள்.பஞ்சாபில் பல அரசியல் தலைவர்கள் தங்கள் வாயைத் திறந்து துணிச்சலான அறிக்கைகள் விடாவிட்டாலும்,நம்புங்கள் என்னை,பலர் ஈழ தமிழ் போராளிகளின் போராட்ட உறுதியையும்,உத்வேகத்தையும் வியக்கிறார்கள்.செய்திகளில் காணும் தற்போதைய உங்கள் போராட்டத்துக்கான வீழ்ச்சி பலருக்கும் சோகத்தையே உருவாக்குகிறது இங்கே.

உங்கள் மக்கள் ரசாயன ஆயுதங்களாலும்,விஷ வாயுக்களாலும் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் இருபக்க துப்பாக்கி சூட்டில் அகப்பட்டுக் கொண்டும்,சில மணி நேரங்களே தப்பிக்க இருக்கும் கணத்தில் இந்த கடிதம் எனது தார்மீக ஆதரவை உங்களுக்கு அளிக்கிறது,

தமிழ் ஈழம் மக்களின் அவலங்களால் நான் சோகம் கொள்கிறேன்.பெண்கள்,குழந்தைகளின் துயரப் புகைப்படங்கள் மலையையும் அசைய வைக்கும். சோகத்துடன், ஆனால் அப்படி ஆகவில்லை.அனைத்து உலகமும்,24 மணி நேர தொலைக்காட்சி ஊடகங்களும் வலி,வேதனைகளை தடுக்கும் ஆற்றல் இல்லாமல் போய் விட்டது.

தங்கள் வாழ்ந்த மண்ணை விட்டு ஓடுவதற்கு பலாத்காரமான அனைத்து ஆண்,பெண்,குழந்தைகளுக்கும் எனது இதயம் புலம்புகிறது முக்கியமாக தமிழீழம் போராளிகளுக்காக.இப்படி எழுதுவதால்,எனது எழுத்துக்கள் எனது உள்மனதின் உணர்வுகள் மட்டுமே என்ற குற்ற உணர்ச்சியும் ஏற்படுகிறது.ஒரு சீக்கியனாக நான் உங்களது போராட்டத்தில் கலந்திருக்கவேண்டும்.எனது வேண்டுதலும் நல்வாழ்த்துக்களும் உங்களுடன் இருக்கட்டும்.தமிழீழத்தைப் பொறுத்த வரையில் காலத்துக்கேற்ற மிகச் சிறந்த ஆதாரபூர்வமான ஆவணங்கள் இருந்தபோதிலும்,உலக நிறுவனங்களும்,உலக சமுதாயமும் ஆயிரக்கணக்கான மக்களின் துயரங்களையும்,அவலங்களையும் துடைப்பதற்கான செயலில் தவறிவிட்டார்கள்.சீக்கியர்கள்,காஷ்மீரியர்கள்,வடகிழக்கு மக்களை கீழ்மைப் படுத்தியது போல் இலங்கை அரசாங்கமும் பகல்வெளிச்சத்து கொலையிலும்,சூறையாடலிலுமிருந்து தப்பித்துக் கொள்கிறது.

புலம் பெயர்ந்த தமிழ்மக்கள் தெருக்களில் போராடி ஐரோப்பிய தலைநகரங்களை பேச்சுவார்த்தைக்கு வற்புறுத்துவது காண மகிழ்ச்சியாக இருக்கிறது.முக்கியமாக நார்வே தலைமையிடம் குரல் எழுப்பியதில் மனக்கிளர்ச்சியுறுகிறேன்.நார்வே புலம்பெயர் தமிழ் மக்கள் ஓஸ்லோவில் நார்வே பிரதம மந்திரியை முற்றுகையிட்டதை செய்திகளில் படித்தேன்.உலகநாடுகளின் வளர்ச்சிக்கான நார்வே மந்திரி எரிக் சொல்ஹைய்ம் " நார்வேயில் வாழும் தமிழர்களின் ஏமாற்றங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் என்னால் அற்புதங்களை ஏற்படுத்த முடியாது" என்று சொன்னதாக அறிந்தேன்.

எரிக்சொல்ஹைய்ம் நார்வே நாட்டு அரசாங்கத்திற்கான NRK தொலைக்காட்சி ஊடகத்திற்கான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது " என்னால் குரல் எழுப்பும் தமிழர்களிடம் பேச முடிகிறது.நான் மீண்டும் ஒரு முறை அமெரிக்கா,ஜப்பான்,ஐரோப்பிய ஒன்றியம் போன்றவைகளிடம் இலங்கையில் போரை நிறுத்த இயலுமா என பேசி பார்க்கிறேன்" என்றார்.இதற்கு தமிழ் எழுத்தாளர் K.P. அரவிந்தம் பதில் மிகப் பொருத்தமானதும்,கலைசார் மேம்பாடுடையதாகும்."ஒருவேளை சொல்ஹைய்ம் அதிசயம் நிகழ்த்த இயலாமல் போயிருக்கலாம்.ஆனால் குறைந்தபட்சம் தவறுகள் இழைப்பதிலிருந்து நின்றிருக்கலாம்.தூதுத்துவம் என்பது நிகழ்த்திக் காட்டக்கூடிய கலையாக இருக்கலாம்.ஆனால் உரிமைப் போர் என்பது இயலாததை நிகழ்த்திக் காட்டுவது".

ஸ்காண்டிநேவியா நாடுகள் மனித உரிமைகளைப் பேணுவதில் உறுதியும் ஆற்றலுமுடையவர்கள்.அதனால்தான் உங்கள் தலைமை நார்வேயை இருதரப்பின் பேச்சாளராக தேர்ந்தெடுத்தது.ஆனால் அரவிந்தம் தலையில் ஆணி அடித்தது மாதிரி சொன்னார் " நார்வே மையப் புள்ளியை தவறவிட்டு விட்டது.சமாதானத்துக்கான இரு தரப்பின் சார்பில்லாத அங்கமாக இருக்கும் நிலையில் எல்.டி.டி.இ யினை ஆயுதங்களை களையுமாறு சக நாற்காலியில் அமர்ந்து இருப்பவர்களுடன் கூடி அழுத்தம் தருவது முறையல்ல.இலங்கையின் இனப்படுகொலையின் கரங்களில் வன்னி மக்களை ஒப்படைக்க வேண்டும் என்ற நிலை இதை விட கவலைக்குரியது.படிப்படியான இவர்களின் தோல்வியால் நார்வேகாரர்கள் அனைத்து உலக மத்தியஸ்தம் பேசும் எண்ணத்திற்கே தோல்வியை கொண்டு வந்திருக்கிறார்கள்.தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள இன்னும் கூட நேரமிருக்கிறது,பூகோள அரசியல் குறிக்கோளர்களின் உடந்தையாக இல்லாமல் உலக மனித நாகரீகங்களுக்கு தங்களை உட்படுத்துவார்களேயானால் ".

நேரடியாகவும் மறைமுகமாகவுமான இந்தியா போன்ற நாடுகளின் உதவியுடன் சிங்கள அரசின் அளவிடா அதிகாரத்தின் கால்களின் கீழ் தமிழீழ மக்கள் நசுக்கப்படுகிறார்கள்.ஈழ தமிழர்களுடனான இயற்கையான தமிழ்நாட்டு சகோதர உறவும் அலட்சியப் படுத்தப் பட்டுள்ளது.13 தமிழ் சகோதரிகளும் மேலும் பலரும் சாகும்வரை உண்ணாவிரதமிருந்தார்கள் உங்களுக்கு ஆதரவாக,ஆனால் ஊடகங்களும்,அரசாங்கமும் இதுபற்றி கவனிக்கிறார்களா?முக்கியமாக நாடே தேர்தல் கள நிலையில் இருக்கும்போது.

தூரத்திலிருந்து நோக்கினால் அனைத்து தமிழர்களின் நிலைப்பாட்டில் தமிழக தலைமை ஏமாற்றுவதாகவும் உண்மையில்லாததுமாக இருக்கிறது.உங்கள் ஈடுபாடுகளை அவர்கள் முழு மனதுடன் ஆதரிக்கிறார்களா என எனக்குத் தெரியவில்லை.உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

எனக்கு,தமிழ் தலைமையைப் போலவே இந்திய தலைமையும் உங்களுடனும் உங்கள் குறிக்கோள்களுடனும் சாணக்கியர்களாக விளையாடுகிறார்கள் எனவே படுகிறது.வெற்றிகரமாக கூட.இந்தியா உங்கள் பகைவனா அல்லது நண்பனா என உலகால் புரிந்து கொள்ள முடியவில்லை.இந்தியா இந்த மாதிரி இரட்டைவேடம் போடவே செய்கிறது.இந்திய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கிறது,இருந்தும் அமைதியான முகத்தை காட்டுகிறது.

நான் போர் விமர்சகனல்ல.ஆனால் நார்வே அமைதிப் பேச்சு நடந்த போது,உங்கள் மக்களின் போராட்டம் மிகவும் பாதிக்கப்பட்டது.நிச்சயமாக அப்பொழுது உங்கள் தலைமைக்கு நடைமுறைக் காரணங்கள் இருந்திருக்குமென நம்புகிறேன்.ஆனால் இந்த மாதிரியான சமாதானப் பேச்சு வார்த்தைகள் நம்பகத்தன்மையில்லாத விதிமுறைகளை மீறிய அரசுக்கு ஆயுதங்களை சேகரித்து மேலும் பல சாவுகளை உருவாக்கவும் அழிவுகளை உருவாக்கவே உதவியது.இந்தியாவும் சீக்கியர்கள்,காஷ்மீரிகள்,நாகா,மிஷோ வுக்கும் இதனையே செய்தது.9/11 க்கு பின்னால் மாற்றமடைந்த பூகோள அரசியல் நிலைகள் கூட நார்வேஜியன் தங்கள் நிலைகளை மாற்றிக் கொண்டதற்கு காரணமாக அமைந்தது.

கடந்த வருடம் இந்த நேரத்தில் கொசோவொ ஒரு புதிய நாடாகப் பிறந்தது.அதற்கும் முந்தைய ஆண்டு,தைமூர் லியஸ்ட் சுதந்திரம் அடைந்தது.2009 தமிழ் ஈழத்துக்கு சொந்தம் என நினைத்தேன்.எனக்கு இன்னும் அந்த நம்பிக்கை இருக்கிறது இந்த வருடத்தில் ஏற்படாதென்ற போதிலும்.உங்கள் போராட்டம் இறுதி வடிவில் இருக்கிறதென்ற எண்ணம் உலகம் பூராவும் இருக்கிறது.

உண்மைகள் பாதிக்கபடுவதாலும் உண்மைகள் சரியாக வெளிப்படாத நிலையிலும் எனது முழு நம்பிக்கை அப்படியிருக்கக் கூடாதென்பது.உங்கள் போராட்டம் தொடர வேண்டும்.புரட்சி சுதந்திரம் என்ற கொடியை நீங்கள் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

அமெரிக்க அட்டார்னி ஃப்ரூஸ் பெய்ன்,அமெரிக்க குடியுரிமை பெற்ற கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் பச்சை அட்டை வைத்திருக்கும் ஜெனரல்.பொன்சேகாவின் மனித உரிமைக் குற்றங்களுக்கு தண்டனை வாங்கித் தருவார் என்பது எனது முழு நம்பிக்கை.நியுயார்க்கை அடிப்படையாகக் கொண்ட இனப்படுகொலை தடுப்பு அமைப்பு இனப்படுகொலை நிகழும் எட்டு நாடுகளைக் குறிப்பிட்டிருக்கிறது,அதில் இலங்கையும் ஒன்று. உங்கள் மண்ணில் நிகழும் மனித உரிமை மீறல்களை முன்னிறுத்தி உலகுக்கு வெளிப்படுத்தும் என நம்புவோம்.

பாதுகாப்பு சபையில் கூட ஐ.நாவுக்கான மெக்ஸிகோ தூதர் க்ளாட் ஹெல்லன் தனது நாட்டின் ஜனத்தொகையை பாதுகாக்கும் பொறுப்புக்கான தீர்மானத்தை கொண்டுவருவதில் கூட சிறிய நம்பிக்கை ஏற்படுகிறது.

அன்பின் திரு.சார்ல்ஸ்,தெற்காசிய பூகோளத்தை மாற்ற நினைப்பவரின் மகனாக இந்தப் போராட்டத்தை நீங்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வீர்கள் என நம்புகிறேன்.எனது தரப்பிலிருந்து இதனைச் சொல்ல விரும்புகிறேன் கொசவோ சுதந்திரம் வெற்றியடைந்த போது " சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங் சொன்னபடி, "சுதந்திரத்தை யாரும் தாம்பூலத்தில் வைத்துக் கொடுப்பதில்லை.யாருக்கு தேவையோஅவர்கள் தங்களது உறுதியாலும்,பலத்தாலும் அதைப் பெற வேண்டும்". விரைவாகவோ,தாமதமாகவோ நீங்கள் அதைப் பெறுவீர்கள்.

நீங்களும்,உங்கள் மக்களும் உங்களது வாழ்நாளிலேயே சுதந்திரத்தை ருசிப்பீர்கள் என வாழ்த்துகிறேன்.எல்லாம் வல்ல இறைவன் தமிழ் மக்களின் மீது தனது ஆசிகளை தூவவும் அவர்களது துயரங்கள் முடிவுக்கு வரவும் உலகின் முன் சுதந்திர மனிதர்களாக உயர்ந்து நிற்கவும் துணைபுரிவாராக.

உண்மையுடன்
ஜெக்மோகன் சிங்

குறிப்பு: இந்த எழுத்தாளர் லூதியானா,பஞ்சாப்பில் வசிப்பவர்.அவரை அணுகவேண்டிய முகவரி jsbigideas@gmail.com