Followers

Monday, November 25, 2013

துபாய் - தனித்திறமை வேலை வாய்ப்பு

வளைகுடா நாடுகளில் திறமைகளையும்,வணிக ஊக்கப்படுத்தலையும் உள் வாங்கிக்கொள்வதில் துபாய்க்கு முதலிடம் தரலாம்.நாம் ஊர் சுற்றும் குவைத் கொஞ்சம் மிராசு மனப்பான்மையுடனும்,திறமைகளை பார்வையிடுவதிலும் சமர்த்து.வளைகுடா நாடுகளின் எண்ணெய் பொருளாதார வருமானத்தை முதலீடு செய்வதில் ரியல் எஸ்டேட்க்கு முக்கிய பங்குண்டு.

சில தினங்களுக்கு முன்பு பன்னாட்டு நிறுவனங்கள் நிகழ்த்திய உயர் அடுக்கு மாடி கட்டிடங்களின் கண்காட்சியில் துபாயிலிருந்து வந்த ஒரு நிறுவனத்தின் காட்சிப்படுத்தல் மனதைக் கவர்ந்தது.மெரினா கடற்கரை மணலில் சிலர் வீடு கட்டி உடைத்து விடுகிற மாதிரியான ஒன்று. அகர்லிக் எனப்படும் பொருளில் துண்டு துண்டாக மிக நுணுக்கமான வேலைப்பாடு கொண்டு மின்சார இணைப்புடன் கூடிய பல மாடிக்கட்டிடம்.

உதாரணத்திற்கு இங்கே ஒன்று மட்டும் இணைக்கிறேன்.மொத்த நிர்மாண கட்டமைப்புகளை இணைய தொடுப்பில் காணவும்.

http://www.3drmodels.com/gallery/exhibit/exhibit1.html

பல துறைகளாக நிறுவனம் இணைந்து வேலை செய்தாலும் இன்னும் வேலை வாய்ப்புக்கள் இருப்பதாக காட்சியமைப்பை நிர்மாணித்த இந்தியர் சொன்னார்.

கட்டிட வல்லுநர்கள்,அலங்கார ஒளி அமைப்பு திறமை கொண்டவர்கள் விண்ணப்பித்து பார்க்கலாமே!

http://www.3drmodels.com/contact/contact1.html


Saturday, November 2, 2013

கொசுக்கடியா? இனி பயமே வேண்டாம்

எந்த ஊரில் என்ன பொருள் விற்கனும்ன்னு தெரியாமல் சில தாய்வான் நிறுவனங்கள் ஷெராட்டன் ஓட்டலில் டேரா போட்டு பல பொருட்களை விற்றதில் ஒரு பொருள் இந்தியாவை நினைவு படுத்தியது.முதலாவது வளைகுடா சூட்டுக்கு மனிதனே மதிய வெயிலுக்கு தாங்க முடியாது.அப்புறம் கொசு எங்கே தாங்க போகுது. இங்கே வந்து ஒரு நிறுவனம் கொசுவத்தி வேணுமான்னு விற்குது.  இந்தியா டார்ட்டாய்ஸ் மாதிரியெல்லாம் புகை விடாது. டார்ட்டாய்ஸ் விலை என்ன என்பதை கொசு விரட்டியர்கள் யாராவது சொன்னா இந்தியாவில் விற்க முடியுமான்னு யோசிக்கலாம்.

கொசுவத்தியின் விசேசம் என்னன்னா கையில் வாட்ச் மாதிரி கட்டிக்கிறது ஒன்று இன்னொன்று சுவற்றிலோ டேபிளிலோ உட்கார வைக்கிற மாதிரி...



நிறுவனம் 10000 + 10000 மொத்தம் 20000 வாங்கினாத்தான் ஆகும் என்கிறது. விலை விபரமெல்லாம் துண்டு போட்டுத்தான் சொல்வேன்:)

வாங்கி விற்க யாராவது இருக்கிறீர்களா? இல்லைன்னா கூகிளிட்டு நீங்களே தேடிக்கண்டு பிடிக்க வச்சுடுவேன்:)

தொலைக்காட்சியில் பார்க்கிற மாதிரியே இன்னும் நிறைய பொருட்களை அறிமுகப்படுத்தலாம்.

இந்தியாவிலிருந்து யாராவது ஏற்றுமதி பொருட்கள் அனுப்ப விரும்பினால் அணுகவும்.

என்ன இது! மறுபடியும் அனுமார் வால் மாதிரி மறுபடியும் பதிவுகள் நீளும் போல தெரியுதே!ஒரு வேளை இதே ட்ரெண்டை புடிக்கனுமோ:)

Friday, November 1, 2013

படம் காட்டி விளக்கு

முந்தைய பதிவில் சில படங்களை ஒட்ட வைத்திருக்கலாம்.சொன்ன கருத்துக்கு ஏதுவாக இருந்திருக்கும்.பதிவு போட்டதற்கு குறைந்த பட்சம் மேலதிக தகவல் தர முடியுமா என்று வெளங்காதவன் கேட்டதற்காக வேண்டி இந்த படம் காட்டி விளக்கு.

Model: Foton FL468-II
Year of Manufacture-2011
Made in China

வெளங்காதவன்!இங்கேயான விற்பனை விலையை மட்டுமே குறிப்பிட்டிருந்தேன்.இதனை இந்தியா அல்லது வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் கப்பல் போக்குவரத்து செலவுகள் கோணத்தில் சிந்திக்க வில்லை.எனவே அசல் நிறுவனமான Foton ல் இந்த உபகரணங்கள் விலை,உதிரி பாகங்கள்,தொழில் நுட்ப உதவிகள்,இறக்குமதி செலவு போன்றவைகளை விசாரிக்கவும்.குவைத்தின் விற்பனை விலை,ஏற்றுமதி செலவு,(கஸ்டம்ஸ் வரி) போன்றவற்றையும் ஒப்பிடவும்.இரண்டில் குவைத்திலிருந்து கொண்டு வருவது லாபகரமாக இருந்தால் வாங்கும் முயற்சியை தொடரவும்.




Model: Foton FL958G-II
Year of Manufacture-2011
Made in China

வாங்கும் இறுதி முடிவு இருந்தால் இங்குள்ள எஞ்சினியரிங் நிறுவனத்துடன் நீங்களே நேரடி தொடர்பு கொண்டு வங்கி தொடர்பு ,கப்பல் ஏற்றுமதி முதற்கொண்டு வியாபாரத்தை மேற்கொள்ள உதவி செய்கிறேன்.A transparent and genuine deal.


Thursday, October 31, 2013

வந்துட்டானய்யா!வந்துட்டான்!

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.ஒரு கேசு தொலைந்ததேன்னு யாரும் சந்தோசப்படுற மாதிரி தெரியல.ஆனாலும் புதுகை அப்துல்லா,வவ்வால்,இக்பால் செல்வன்,ஜோதிஜி என ஆளைக்காணோமே என குசலம் விசாரிப்பது மகிழ்ச்சிக்குரியதே.எனது நன்றியை சொல்லிட்டு இங்கே வந்தால் அப்படியே குந்த வச்சு உட்கார்ந்துக்குவோமோ என்ற பயத்தோடு கூடவே சென்னையின் பத்தில் ஒரு சதவிகிதம் ஏரியா கூட இல்லாத குவைத்தில் வியாபாரம் பண்ணலாம் வாரியான்னு மொபைல் பேசுற நிறுவனத்திலிருந்து கப்பல் விடுறவன் கிட்ட போய்,தாய்லாந்து,இந்தியா,அவ்வளவு ஏன் நம்ம சிவகாசிக்கு கூட பிள்ளையார் மாதிரி உட்கார்ந்த இடத்திலிருந்து கிட்டே கூப்பிட்டால் ஒருவரும் மசிய மாட்டேன்கிறார்கள்.

அப்படியும் வருகிற சிவகாசி காலண்டர் தயாரிப்பாளர் பிள்ளையார் காலண்டர் விற்பனைக்கு தயாராக இருக்கிறது என சேம்பிள் அனுப்புகிறார்.ஒருத்தர்கிட்ட விற்கிற பொருள் இருக்குது.இன்னொருவருக்கு வாங்க வேண்டும்.இடையில் இருக்கும் கடலை கடப்பதுதான் பிரச்சினையே.சரி இதுதான் வேண்டாம் லோக்கலா டீல் பண்ணலாமென்றால் பொட்டிக்கடை வைத்திருக்கும் பெங்காலிக்கும்,ஈரானிக்கும் தொழில் நுட்பம் தெரியமாட்டேங்குது.இப்ப என்னமோ மொபைல் ஆப்புன்னு என்னமோ விற்குதாமே அதுகூட தெரியாத அரபிக்காரன் கூகிள் அண்ணாத்தே தயவால் முகப் புத்தகம்,டிவிட்டுகிட்டு உன் கடைக்கு டிராபிக் என்னங்கிறான்:)

இப்படியான நிலைமையில் போடாத குரங்கு வித்தை குட்டிக்கரணம் போட்டும் கடையில் போணியாகாத சோகத்தில் இருக்கும் என்னிடம் வந்து எங்கய்யா ஆளைக்காணோம்ன்னு கேட்டால் சிவாஜி ஸ்டைலில் நான் சிரித்துக் கொண்டே அழுகிறேன்.நம்ம நிலைதான் இப்படின்னு பார்த்தால் டெண்டர்க்கு வாங்கிய இரண்டு Excavator விலை சுமார் 11 கோடி விலைக்கு வாங்குவதற்கு ஆள் இல்லாமல் ஒரு நிறுவனம் தேடிக்கொண்டிருக்கிறது.சுமார் ஒரு வருடத்திலிருந்து இரண்டு வருடத்திற்குள் மெகா ஸ்கைஸ்கிரேப்பர் மாடிக்கட்டிடங்களை நிறுவதற்கு இந்த எக்ஸ்காவேட்டர்களும் ஒரு காரணம்.இந்தியாவில் வெள்ளைப்பணத்தோடு யாராவது சட்ட வரைமுறைகளோடு வங்கி மூலமாக் வாங்குவதற்கு ஆட்கள் இருந்தால் அனுப்பி விடலாம்.Caterpillar,Volvo போன்ற பெயர் பெற்ற நிறுவன தயாரிப்புக்களை விட விலை குறைவு.காரணம் தயாரிப்பு நிறுவனம் சீனா.

அமெரிக்காவில் போணி பண்ண முடியாமலோ என்னவோ ஹாரி என்ற அமெரிக்கர் Dream lites,Slushy magic என்ற குழந்தைகளின் பொருட்களை கொஞ்சம் மார்க்கெட் செய்து தரச்சொல்லி முயன்று கொண்டிருக்கிறேன். கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக உணவகங்களில் முன்பதிவு செய்து கொள்வதற்கு ஒரு மென்பொருளை தேடி குஜராத் ஓடினால் எங்கள் நிறுவன ஒப்பந்த நிறுவனத்தை குவைத்தில் அணுகவும் என திருப்பி கடிதம் போட்டு விட்டார்கள். இங்கே போய பார்த்தால் அவர்கள் 12 வருடம் குப்பை கொட்டி பெருக்கி அழகாக நிறுவனம் அமைத்துள்ளார்கள்.

சிவகாசி கதையை கேளுங்களேன்.2014 வருகிறதே!யாருக்காவது 2014 காலண்டரை மொத்த விலைக்கு விற்கலாம் என கூகிள் தேடலில் சிவகாசிக்குப் போனால் SFA என்ற நிறுவனம் ஏற்கனவே உற்பத்தி திறனில் சிறந்து இருப்பது மாதிரி தெரிகிறதென்று அணுகினால் நீங்கள் மும்பைக்குத்தான் அயல்நாட்டு விற்பனைக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று போனில் சொல்லி விட்டார்கள்.சரியென மும்பைக்கு கடிதம் எழுதினால் அவர்கள் என்னை சுயமதிப்பீடு செய்து கொண்டு நீங்கள் இனி துபாயோடு தொடர்பு கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்கள்.

துபாயிலிருந்து வந்த விலைப்பட்டியலைப்பார்த்தால் சிவகாசி உற்பத்தி விலை+மும்பை லாபம்+துபாய் லாபம் என நமக்கு ஏதும் மிஞ்சாத நிலைமை. ஒரு முறை தமிழ் புகைப்படக்கலை தலைகளுக்கு கடிதம் போட்டு விட்டு பதில் வராத காரணத்தால் அப்படியே கிடப்பில் போட்டு விட்டேன். இன்னும் எவ்வளவு நாளைக்கு ஹாபின்னு சொல்லிகிட்டே க்ளிக் செய்வீங்க?சிறந்த படங்கள் என தேர்வை விறபனை சந்தைக்கு கொண்டு சேர்த்து விடலாம்.செய்ய வேண்டியதெல்லாம் புகைப்படம் அனுப்புவதும் விலை நிர்ணயம் அமெரிக்கன் டாலரில் எவ்வளவு என்பது மட்டுமே.விற்பனைக்கு நான் கொண்டு செல்வதில் விற்பனைப் படுத்தப்பட்டால் தருமி ஸ்டைலில்....ஓஓ! நம்ம தருமி வேற இருக்கிறார் இல்ல! சரி நம்ம திருவிளையாடல் தருமி ஸ்டைலில் ஏதாவது பார்த்து போட்டுக்கொடுங்கன்னு சொல்லிப்பார்த்தேன்.யாரும் கண்டுக்கல.நாதாஸ் மட்டும் எனது விளம்பர உதவிக்காக வேண்டி ஒரு அழகான பெராரி கார் அனுப்பினார்.

இன்னுமொரு கதை கேளுங்களேன்!குவைத்தில் நீளமா,உயரமா கட்டிடம் கட்டி வச்சிருக்காங்க.யார் எங்கே இருக்காங்கன்னே தெரியாதேன்னு கூகிள் எர்த்தோடு அவர்கள் கட்டிடத்தை போகஸ் செய்து விடலாம் என கூகிள் ஸ்கெட்சப் சான்றிதழ் வாங்கின நிறுவனத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்.நம்மாளுக ஹாலிவுட்டுக்கே சவால் விடுறவங்ளாச்சே.....(வவ்வால்!விஸ்வருபம்!விஸ்வரூபம்:)) என யாராவது Motion graphics design advertisement கோடம்பாக்க வல்லுனர்களையும் கூகிளில் தேடுகிறேன்.யாரும் அகப்பட மாட்டேன்கிறார்கள்.இங்கே கூட்டத்துக்குள் யாராவது ஒளிந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் உள்ளேன் நண்பா என தலையை காட்டவும்.

talabat.com என ஒரு வளைகுடா முழுவதும் வளைத்துப்போட்டு விட்ட ஒரு நிறுவனம் என் தூக்கத்தை கலைத்துக்கொண்டிருக்கிறது.யாராவது தொழில் நுட்ப வல்லுனர்கள் இருந்தால் அந்த நிறுவனம் வாங்கும் ஒரு KFC ஆர்டருக்கு கமிசன் ரூபாய் 100 எனபதை நான் ரூ 80க்கு தருகிறேன் என போட்டி போடலாம். தேவையான வை மென்பொருளும் KWD payment gateway மட்டுமே. 

நீ ஆணியே புடுங்க வேண்டாம்.உன் மூலமா யாரையாவது பொருள் வாங்கச்சொல்லு என அமேசன் விற்பனை தளம் கடிதம் போடுது.

Idea that sells என்கிற இணைய கோட்பாட்டில் விற்பதற்கும்,வாங்குவதற்குமான வாய்ப்புக்கள் உள்ளன. இரண்டு பக்கங்களையும் இணைப்பதற்கான நெட்வொர்க்,நம்பகமான மனுசன் என வெளிச்சம் போட இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவை. 

அமேசன் என்றவுடன் இன்னுமொரு எண்ணம்.அது ஏன் அமெரிக்கா வரைக்கும் போக வேண்டும். வளைகுடாக்களில் தினாரையும்,திர்காமையும் வைத்துக்கொண்டு சொந்தங்களுக்கு சில நேரங்களில் டெலிபோன் வாழ்த்துக்கள் சொல்வதோடு பிறந்தநாள்,திருமண நாள்,தீபாவளி,புது வருட நினைவுகள் பலருக்கு முடிந்து விடுகிறது.பட்டுப்புடவைகள், கேக்,மல்லிகை,ரோஜா போன்றவற்றை உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கலாம்.மாவட்டம் தோறும் முக்கியமாக தஞ்சாவூர்,திருச்சி போன்ற பகுதிகளில் கூரியர் உதவியோடு கொண்டு சேர்க்கும் அதே விற்பனை நிறுவனங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்.

கடன் தரும் வங்கி,மாமல்ல புர பொழுது போக்கு பார்க் மாதிரி மல்டி மில்லியன் நிறுவனங்களுக்கு தரமான நிறுவனங்களாச்சே என ஒப்பந்தம் செய்யாமல் விளம்பர யுக்திகள் செய்து விட்டு காசு வராமல் அல்லாடுகிறேன்.இப்போதைக்கு அனுபவங்கள் மட்டும் வரவு.

இன்னும் நிறைய அனுபவங்கள் வரும்.மொத்தமா சேர்த்து வச்சு அப்புறமா சொல்லுகிறேன்.



Thursday, June 20, 2013

வெற்றியின் முதல் படியில்

சென்ற பதிவில் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த அமுதவன் சார்,ரெவரி,பூபதி பெருமாள்,வருண்,நந்தவனத்தான்,வேகநரி,செங்கோவி மற்றும் எதிர்கால விவசாய மேதை கடி வவ்வால்:) அனைவருக்கும் எனது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொண்டு கச்சேரியை துவங்கலாம்.

வவ்வால்!சென்ற பதிவில் நந்தவனத்தான்"நீர் வெவசாயத்துல ஜெயிப்பீரா என்னவோ காலம்தான் பதில் சொல்லும். ஆனா உமக்கிருக்கற வாயையும் புத்தியையும் பார்த்தால் நீர் கன்சல்டன்ஸி வைத்தால் நல்லா காசு அள்ளலாம்.." என்று ஆலோசனையோடு யூடியுப் பிலிம் வேற காட்டியிருந்தார்.நமக்கு வேற அலை வரிசை ஒண்ணா வெலை செய்யுதா!யோசனை செய்யவும்:)

ஆடுன காலும்,பாடுன வாயும் வரிசையில் எழுதுற கையும் சேர்த்துக்கிடலாம். கடந்த ஒரு மாத காலத்தில் எப்படி தொழில் துறையில் நுழையலாம் என்ற திட்டமிடலின் முதல் சுற்றில் சட்டபூர்வமாக இணைவதற்கான வெற்றியின் முதல் படியில் நுழைந்து விட்டேன்.என்னோடு இணைந்து கொள் என்ற பெரும்பாலோனோரின் விருப்பம்,நம்மை ஆட்டைய போட்டுடுவானோ என்று நான் இணைய நினைப்பவர்களின் தயக்கம்,காசு கொடு என்ன வேணுமோ பண்ணிக்கோ என்ற பல அனுபவங்களோடு என் மீதான நம்பிக்கையையும்,மதிப்பையும் சரியான பல் நோக்கு நிறுவனத்தோடு கொண்டு சேர்த்தது நிவின் என்ற ஒரு தமிழ்க் கரம்.பெரும்பாலான வியாபார பேச்சுக்கள் அலுவலகத்தின் நாறகாலிகளில் பேசி முடியும் போது நேராக வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போய் அரபி காபியும்,இனிப்பும் கூடிய உபசரிப்புடன் வியாபார ஒப்பந்தங்களை பேசி வந்துள்ளேன்.என்னைப் பற்றி அனைத்தையும் நிவினிடம் சொல்லி மெய்யாலுமே பிளாக்கன் என்பதை குறிப்பிட மறந்து விட்டேன்:)காலம் வரும் போது சொல்லிக்கொள்ளலாம்.

வியாபார புதிய சிந்தனைகள்,சுதந்திர எண்ணங்கள்,விளம்பர யுக்திகள்,ருசி செய்து பாரு பிடிச்சா காசு கொடு இல்லாட்டி வேணாம் என்ற பலவற்றிலும் என்னை கவர்வது அமெரிக்காவே.நாமும் அவர்களை பார்த்து நிறைய பொருட்களை பொருள் மாற்றம் செய்து அழகு படுத்தி சந்தை படுத்தி விடுகிறோம். உதாரணமாக சொன்னா மசாலா,இட்லி தோசை மாவு மாற்றங்கள்.நம்ம அம்மா,சகோதரிகள்,கட்டை பிரம்மச்சாரிகள் அனைவரும் ரசம் வைக்கனும்ன்னா புளிக்கரைசலை ஊற வைத்து இறுத்து ஊற்றி ரசம் வைப்பதுதான் பாரம்பரிய ரசம் சமையல் முறை.நம்ம ஊர் புளி பம்பாய்க்கு ரயில் பயணம் செய்து அங்கே ஒரு நிறுவனம் கழிவுகள் நீக்கி multi purpose Tamarind என்றும் சமோசாவுக்கு தொட்டுக்க Tamarind sauce என்றும் பம்பாயில் வித்தது போக கொஞ்சம் பெட்ரோல் டாடரையும் பார்க்கலாம் என்று 1000 x 24 பாட்டில்களை இங்கே கொண்டு வந்து சேர்த்தால் இங்கே மார்க்கெட்டிங் செய்ய முடியவில்லை.இதுல என்ன ஒரு புது செய்தின்னா நம்ம ஊர்ல மோர் குடிக்கிற மாதிரி புளி ஜூஸ்தான் அரேபிய சீசா புகையிழுக்கும் கடைகளின் மெனு என்பது நான் புகைபிடிக்காத ஒரே காரணத்தால் எனக்கு இதுவரை தெரியாது.

மேலும் இப்படி ஒரு பொருள் சந்தையில் இருப்பதே பலருக்கும் தெரியாது.இதனை எப்படி சந்தை படுத்துவதென்பது என்பதில் துவங்கி முன்பு ஒரு முறை தமிழில் புகைப்படக்கலை பதிவுகளின் நிபுணர்களில் ஒருவரான நாதாஸ் ஒரு பிரிட்ஜுக்குள் ஒரு கை மட்டும் போய் ஒற்றை கொக்கோகோலாவை எடுப்பது மாதிரி ஒரு படம் போட்டிருந்தார்.கொஞ்சம் வித்தியாசமான பார்வை இன்னும் நினைவில் நிற்கின்றது.தமிழில் புகைப்படக்கலை பக்கம் போய் மிக அதிக காலங்கள் ஆகிவிட்டன.இனி வந்து பார்க்கிறேன்.

இது போல் விளம்பர யுக்திகள்,பொருட்களின் மார்க்கெட்டிங் துவங்கி இங்கே என் புருசனும் கச்சேரிக்கு போறான்ங்கிற மாதிரி நிறைய இணைய தளங்கள் நொண்டிகிட்டி இருக்கின்றன.இவற்றை கண்டு பிடித்து ஒடைஞ்ச கை,கால்களை ஒட்ட வைக்கவோ அல்லது புதுசா முக பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது என பல் நோக்கு வியாபார திட்டங்களோடு அதிகம் போட்டிகள் இல்லாத பொருட்களை தமிழகம்,அமெரிக்காவிலிருந்தே ஆன்லைனில் விற்பது என்ற புது முயற்சிகள்.யாராவது ஏற்றுமதி பொருட்கள்,புது யுக்திகள் சந்தைபடுத்தல் ஆர்வம்,பொழுது போக்குக்கு புகைப்படம் எடுப்பவர்கள், இணைய தளம் உருவாக்குபவர்கள்,கிராபிக் டிசைனர்கள் கொஞ்சம் காசும் பார்க்கலாமே என்று நினைப்பவர்கள் பின்னூட்டத்திலோ அல்லது rajanatcbe@gmail.com முகவரிக்கு தனி மடல் அனுப்பவும்.

அமெரிக்க டாலர்ல வித்தா 55-60 ரூபாய்தான் கிடைக்கும். அதையே குவைத் தினாரில் விற்றால் 180-200 ரூபாய் கிடைக்கும்.அமெரிக்காவின் பெயர் அறிமுகத்தால் செந்தில் மாதிரி 60ரூபாய் அமெரிக்கா டாலர்தான் பெருசுன்னா நீங்கள் போக வேண்டிய முகவரி கூகிள் தேடல்.

மறுபடியும் ஒட்டவைக்கும் போதுதான் கவனிச்சேன்.மெல்ல நகர்ந்து,ஊர்ந்து இதுவரையிலான பார்வையாளர் வரிசை 299. இனி யார் 300 என்பதை ஒட்ட வச்சிட்டு பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.இதுவே இதுவரையிலான ஏனைய பதிவர்களுக்கான எனது பின்னூட்டங்கள் என்றால் எண்ணிக்கை வரிசை எகிறும் என நினைக்கிறேன்.காரணம் பதிவுகள் சொல்வதை விட அப்போதைக்கான உடனடி நிவாரண எண்ண வடிகால் பின்னூட்டம் என்பதால் மேயுறதுதான் இதுவரை எனது முதல் விருப்பமாக இருந்தது.இனி கூகிள்காரனிடம் சொல்லி பின்னூட்டத்துக்கும் அலாஸ்கா வரிசை ஏத்த சொல்லனும்:)

இப்போதைக்கு அனைவருக்கும் மீண்டும் நன்றி வணக்கம் சொல்லிட்டு உட்கார்ந்துக்கிறேன்.


Monday, June 10, 2013

வெச்சுட்டான்யா ஆப்பு!

வாழ்க்கையின் இனிமையான தருணங்கள் என்றால் குழந்தை பருவம்.பள்ளி பருவம்,கல்லூரி,காதல்,கல்யாணம்,குடும்பம் என்பதோடு நிச்சயம் தமிழ்மண நேரங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.அதனை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்ற நிலையில் யார் என்ன சொல்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை.நக்கீர பரம்பரை வவ்வால்!தொலைக்காட்சி பார்த்தே நடராஜன் பரிட்சை எழுதுகிறான் என்ற கவலையெல்லாம் இனி வேண்டாம்.நேற்று நரேந்திர மோடிதான் அதிகார பூர்வ பிஜேபி தேர்தல் இயக்குநர் என்பது தவிர இந்தியாவில் என்ன நிகழ்கிறது என்பது கூட தெரியாது.இனி காங்கிரஸ் சார்பாக ராகுல் மல்லுக்கட்ட தயாரா என்பதை மட்டும் தொலைக்காட்சியில் எதிர்பார்க்கிறேன்:)

இரண்டு  விவாத சேம்பியன்கள் விட்டேனா பார் என்ற போட்டியில் கலந்து கொள்ள முடியாதபடி தற்போது மேய்க்கும் ஒட்டக நிறுவனம் லே ஆஃப் என பலரை வேலை நீக்கம் செய்து விட்டதில் நானும் ஒரு பிரதிநிதி என்பதால் வவ்வால்,வியாசன் விவாத களத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.மன்னிக்கவும்.

ஒரு லீவு எடுத்துட்டு இந்தியா போய்ட்டு திரும்பி வந்தால் அண்ணன் எப்ப போவான் நாற்காலி எப்ப காலியாகும் என காத்திருந்த நிறுவனம் வந்தவுடன் லே ஆஃப் கொடுத்து விட்டார்கள்.இருந்தாலும் இன்னும் இங்கே ஒட்டகம் மேய்க்கும் அனுமதி இருப்பதால் சரி என கையெழுத்து போட்டுக்கொடுத்து விட்டேன் நமது திறமை நம்மிடம்தானே இருக்கிறது என்ற நம்பிக்கையில். இனி மேல் எந்த நிறுவனத்திலும் பணி செய்வதில்லையென்ற தீர்மானத்தோடு தனக்குத் தானே சுய முயற்சியில் உள்ளேன்.பெரும்பாலும் விளம்பர நிறுவனம், மார்க்கெட்டிங, ஏற்றுமதி-இறக்குமதி போன்றவற்றில் கவனம் செலுத்தலாம் என உள்ளேன். கிராபிக் டிசைனர் மற்றும் இ-மார்க்கெட்டிங் துறையில் யாராவது இருந்தால் சுதந்திரமாக பணி செய்யும் கால அவகாசம் உள்ளவர்கள்  rajanatcbe@gmail.com இமெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.


ஒட்டகம் மேய்க்கிற வேலை ஒருபுறமிருக்க கடந்த சில மாதங்களாக சவுதியின் சட்ட மாற்றங்களைத் தொடர்ந்து இப்பொழுது குவைத் நாட்டிலும் சட்டங்களை இறுக்கும் முயற்சிகள் தொடர்கிறது.வாகனம் ஓட்டுவதில் சாலை விதிமுறைகள் மீறல்,வாகனம் ஓட்டும் உரிமை இல்லாதவர்கள், அங்கீகாரமின்றி விசா காலாவதியாகியவர்கள் என்று உள்துறை தனது கடமையை செய்கிறது என்று சொன்னாலும் கூட கல்யாணமாகியும் பிரம்மச்சாரிகளாக கூட்டாக தங்கும் ராஜஸ்தான் மாநிலத்தவர்கள் பலரையும் இரவு நேரத்தில் தங்குமிடங்களில் புகுந்து விசாரணை செய்து அப்படியே அனுப்பி வைத்து விட்டார்கள் என்ற தகவல்கள் கசிகின்றன.பொதுவாக இந்த நாட்டில் உள்ளவர்கள் சட்டங்களை மதிக்காமல் விசாக்களுக்கு காசு வாங்கி விட்டு எப்படியோ சம்பாதித்துக்கொள் என்று விட்டு விடுகிறார்கள்.விசா நிறுவனங்களும் அப்படியே.இந்திய தூதரக செயல்பாடுகள் பற்றி பதிவாகவும்,பலரின் பின்னூட்டங்களுக்கும் கருத்து சொல்லியாகிவிட்டது. ரஷ்யா காலத்து சிவப்பு நாடாக்கள் இன்னும் இறுகியே நிற்கின்றன. இந்திய தூதரகம் முதலில் தூங்கிக்கொண்டிருந்ததால் பலருடைய பாஸ்போர்ட் கூட இல்லாமல் பலரையும் டெல்லிக்கு அனுப்பி விட்டார்கள் என்றும் இதில் சேட்டன்கள் கிட்டத்தட்ட 50 பேர்கள் இந்தியா சென்று கேரள அரசு மத்திய அரசிடம் முறையிட பின் இந்திய தூதரக அதிகாரி டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவில் அனுமதிக்க முடியாது என அழுத்தங்கள் கொடுப்பதாகவும் செய்திகள் வருகின்றன.குவைத் உள்துறை இதற்கெல்லாம் அலட்டிக்காமல் இன்னும் சிறையில் தள்ளிக்கொண்டுதான் உள்ளது.ஜனத்தொகை ரீதியாக இந்தியர்கள் அதிகம் இருப்பதால் சட்டவரைமுறை மாற்றங்களில் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் இந்தியர்களாகவே உள்ளார்கள்.இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரிபவர்களுக்கு வயலார் ரவி என்ற அமைச்சரை மத்திய அரசு வைத்திருந்தும் வயலார் ரவி " இப்படியொரு நிகழ்ச்சி குவைத்தில் நடப்பதே எனக்கு தெரியாது" என்று தொலைக்காட்சிக்கு பேட்டி தருகிறாராம்.

பிரச்சினைகளுக்கு அரசு ரீதியில் தீர்வுகள் வந்தால் நல்லது.இல்லையென்றால் இந்திய வேலையில்லா திண்டாட்டத்தில் பலரும் இந்தியா திரும்பும் பட்சத்தில் இந்தியாவே பாரங்களை சுமக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

முன்பு மாதிரி வளவளத்தான் பின்னூட்டங்கள் போடும் கால அவகாசம் இல்லாததால் பின்னூட்ட கருத்துக்களுக்கு பதில் சொல்ல இயலாத சூழலுக்கு மன்னிக்கவும்.

இப்பொழுது பதிவை ஒட்டவைக்கும் போதுதான் பார்த்தேன்.பின்னூட்டங்கள் 94 தொடுகிறது.ஆட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் இரட்டை சதம் அடித்திருக்கலாம். வவ்வால்,வியாசன் மற்றும் அனைத்து பின்னுட்ட நண்பர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக.





Monday, May 20, 2013

வீண் போன சீமான்!

முள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் மற்றும் பட்டு வெங்கிடுக்கும் (பட்டாபட்டி) எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு எனது பதிவு மௌனத்தை கலைக்கிறேன்.சொல்வதற்கு தலைக்குள் நிறைய சுற்றிக்கொண்டிருந்தாலும் கூட பதிவுகள் எதையும் கிடப்பில் போட்டு ஊறவச்சு சொல்லும் வழக்கமில்லாததால் அவ்வப்பொது ஏற்படும் உணர்வுகளை அப்படியே கொட்டுவதுதான் வழக்கம்.இதுவும் அப்படியே!

இன்றைக்கு சீமான் பொதுக்கூட்டம் தமிழக அரசால் தடை செய்யப்பட்டதும் கூடவே ஜார்ஜ் புஷ் ஈராக் பயணத்தை யாரிடமும் சொல்லாமல் சென்றது மாதிரி காஷ்மீர் தனிநாடு கோரிக்கையாளர் யாசின் மாலிக்கை யாருக்கும் தெரியாமல் தமிழகம் கூட்டி வந்து பேச வைத்த வரலாற்று தவறை அறிந்து திடுக்கிட்டேன்.சீமான் உச்சக்குரலில் தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார் என்ற சீமானின் பிம்பத்தைக் கடந்து பிரச்சினைகளின் மையப்புள்ளிகளை அலசும் திறனற்ற மனிதராக இருக்கிறாரே என்றே மனம் பதைபதைக்கிறது. 

இந்த பதிவை எழுதும் முன் இதற்கும் முன் அருந்ததிராயின் இலங்கை காஷ்மீர் பிரச்சினை குறித்த கருத்தை தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.காஷ்மீர் பிரச்சினை இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் அமெரிக்காவின் பாகிஸ்தான் ஆதரவு நிலையில் இந்திரா காந்தியின் பாகிஸ்தான் இரண்டாக உடைந்த பங்களாதேஷ் உருவாக்கத்திற்கு பின் பாகிஸ்தான் வன்மத்தாலும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக தீவிரவாத செயல்களை ஊக்குவிக்கப்பட்டு காஷ்மீர் பண்டிட்கள் துரத்தியடிக்கப்பட்டு தலிபான் உருவாக்கத்தில் அல்ஹைதாவின் உச்சம் தொட்டு ஆப்கானிஸ்தான் அரசியலோடு அமெரிக்காவின் இரட்டை கோபுர தகர்ப்பின் உலக அரசியல் மாற்றத்திற்குப் பின் ஜார்ஜ் புஷ்சும்,ஒபாமாவும் அமெரிக்கா நாட்டாமை செய்யாது இந்தியாவும்,பாகிஸ்தானும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஒதுங்கிக் கொண்ட தற்போதைய நிலையின் முக்கிய நிகழ்வுகளில் இந்திய ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள்,காஷ்மீரிகளின் உயிர் இழப்பு துயரங்கள் இணைந்த வரலாற்றில் இந்திய பகுதியின் காஷ்மீர் சுயாட்சி அந்தஸ்துடன் தனது முதலமைச்சரை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கும் வல்லமையோடு தனி மாநிலமாக திகழ்கிறது.

இலங்கை இனம்,மொழி அடிப்படையில் ஆராய வேண்டிய ஒன்று.காஷ்மீர் இந்தியா,பாகிஸ்தான் பிரிவினையின் அரசியல் அடிப்படையில் உருவான ஒன்று.இரண்டையும் ஒன்றாக ஒப்பிட முடியுமா?இலங்கையில் வாழ்வோர்,புலம் பெயர்ந்தவர்கள்,தமிழக தொப்புள்க் கொடி உறவைத் தாண்டியும்,மனித உரிமைக் குழு அமைப்புகள்,மேற்கத்திய நாடுகளின் ஆதரவு,ஐ.நா வரையிலும் போய் உட்கார்ந்து கொண்ட தமிழர்களின் உரிமைகளை யாசின் மாலிக் ஆதரவு பெற்று தந்து விடுமா? மாறாக யாசின் மாலிக்கின் ஆதரவு எப்படிப்பட்ட பின்னடைவை ஈழத்தமிழர்களுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறதென்ற புரிதலாவது இருக்கிறதா சீமான்?

தடாலடி அரசியலுக்கு வேண்டுமென்றால் யாசின் மாலிக் உதவக்கூடும்.நாளை பாகிஸ்தானில் ஒருவர் யாசின் மாலிக் கருத்தை ஆதரிக்கிறேன் பேர்வழியென உள்குத்து அரசியலோடு தமிழகத்திற்குள் மூக்கை நுழைக்க அனுமதிப்பீர்களா சீமான்? தமிழகத்தைப் பொறுத்த வரையில் மரணத்தின் இறுதி மூச்சை சுவாசித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் என்ற நம்பிக்கையை தகர்த்து ஆக்சிஜன் கொடுத்து முதல் உதவி செய்திருக்கிறீர்களே சீமான்!உங்களுக்கு வேண்டுமென்றால் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் மேடைப் பேச்சும்,அப்ப இனித்தது இப்ப கசக்குதா போன்ற வசனங்கள் இனிக்கலாம் கசக்கலாம்.ஜெயலலிதா ப.ம.கவுக்கு வைத்த ஆப்பை போல் உங்களுக்கும் ஆப்பு வைத்தாலும் தப்பேயில்லை.

திரைக்களம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.அதில் மட்டும் உங்கள் நிபுணத்துவம் காட்டுங்கள். துயர ஈழத் தமிழர்களை இனியும் துயரத்தில் ஆழ்த்தாதீர்கள்.

Sunday, March 24, 2013

மாணவ சகோதர சகோதரிகளே!உங்கள் நண்பர்கள் யார்?

தமிழகத்தின் மீண்டும் ஒரு முறை புரட்சி மாற்றத்துக்கு வித்திட்ட மாணவ தோழமைகளுக்கு நன்றியோடு மீண்டும் கல்வியில் கவனம் செலுத்தும் கால அறிக்கை வந்துள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்ட மனிதாபிமான உணர்வுகளும்,பன்னாட்டு அரசியல் பற்றிய தெளிவும் இருப்பதை ஊடக நேரலைகளின் மூலம் உணர முடிகிறது.அதே நேரத்தில் உண்ணாவிரத போராட்ட மாணவர்களின் தனிக்கருத்துகளில் பல மாற்றுக்கருத்துக்களும் எதிரும் புதிருமாகவும்,இடது வலதுசாரி சித்தாந்த வாசங்கள் காணப்பட்டதன் விளைவாக இந்தக் கருத்துக்கள் சில மாணவர்களுக்குப் போய்ச் சேரவேண்டுமென்ற நோக்கில் பதிவு செய்யப்படுகிறது.

.ஈழப்பிரச்சினையைப் பொறுத்த வரையில் இந்திய மத்திய அரசின் ஏமாற்று வித்தைகளை போராட்டக் கோரிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஐ.நா.மனித உரிமைக்குழுவில் தனது ஆதரவாளர்கள் யார்,ஆதரவின்மையாளர்கள் யார் என்று தெரிந்து கொள்வதற்காகவே இலங்கை வாக்கெடுப்பை இந்தியாவின் ஆலோசனையையும் மீறி வற்புறுத்தியது.இந்தியா இலங்கை ஆதரவு, ஆதரவின்மையிலிருது தப்பிப்பதற்காகவே மொத்தமாக தீர்மானம் நிறைவேற்றுவதற்கு விரும்பியது.இலங்கை அரசு தான் தோல்வியடைவோம் என அறிந்தும் தீர்மான ஆதரவு நாடுகள்,தமது ஆதரவு நாடுகளை அறிந்து கொள்ள விரும்பியது.இலங்கை அரசுக்கு மட்டுமல்ல ஈழத்தமிழர்களுக்காக போராடும் ஒவ்வொருவரும் தமிழர்களின் ஆதரவாளர்கள் யார், ஆதரவின்மையாளர்கள் யார் என்று அறிந்து கொள்வது முக்கியம்.

அமெரிக்க தீர்மான ஆதரவு நாடுகள்
 
 இலங்கைக்கு ஆதரவாக தீர்மானத்தை எதிர்த்த நாடுகள்

நடுநிலை நாடுகள்
 பட உதவி யின் இணைய தேடல்: rste.org

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை காலம் தொட்டு இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பல ஊடகங்களும்,தமிழ் உணர்வாளர்களும்,இணைய கருத்துப் பரிமாறல்களும் செய்து வந்தன.என்ற போதிலும் மொத்த தமிழர்களையும் உலகையும் உலுக்கவில்லை.

போருக்குப் பின் ஒப்புக்கு சப்பாணியாக பான் கி மூன் இலங்கை பயணம் செய்தார். 2009ல் ஐ.நா மனித உரிமைக்குழு தீர்மானத்தை அனைத்து நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.இதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.இதில் திருப்தியடையாத மனித உரிமைக்குழுக்களின் அழுத்தங்களின் காரணமாக 2011ல் Report of the Secretary-General's Panel of Experts on Accountability in Sri Lanka என முவர் குழுவை அமைத்தார்.



மூவர் குழுவின் உறுப்பினர்கள்

1. இந்தோனேசியாவின் முன்னாள் அட்டார்னி ஜெனரலும்,மனித உரிமைக்குழு தேசிய ஆணையத்தின் உறுப்பினர மர்சூகி தருஸ்மன்- Marzuki Darusman,

2. தென் ஆப்பிரிக்காவின் நீதிபதியும் டெஸ்மன்ட் டூடுவின் சமாதான நிறுவனத்தின் நிர்வாக தலைவர் யாஸ்மின் சூகா - Yasmin Sooka

3/ அமெரிக்காவின் மிக்ஸிகன் சட்டப் பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்டீவன் ஆர். ராட்னர் - Steven R. Ratner

இம் மூவரின் இலங்கை போர்க்குற்ற அறிக்கை பக்க சார்பில்லாமல் இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்களையும்,விடுதலைப்புலிகளின் தவறுகளையும், பொது மக்களை பாதுகாப்பு கேடயங்களாக பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்தது.

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகளையும்,விடுதலைப்புலிகள் மீதான சிறுவர்களையும் போரில் பயன்படுத்தியது போன்ற குற்றங்களையும் இதன் அடிப்படையில்தான் துவங்கியிருக்க வேண்டும்.மாறாக இலங்கை அரசு இம்மூவர் குழு ஐ.நா அறிக்கையை தருஸ்மன் அறிக்கையென்றும் தனது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் நிராகரித்தது.இதனிடையே தமிழகத்தில் கட்சிகளின் நலன் சார்ந்த ஆனால் தமிழ் உணர்வோடு ஈழமக்களுக்கான குரல்கள் ஒலித்தன.

தி.மு.க அ.தி.மு.க பங்காளிச் சண்டைகளுக்கும் அப்பாலும்,திருமாவளவன் தி.மு.க சார்பு குரலுக்கு அப்பாலும் ஈழப்பிரச்சினை பற்றிய கவலைகள் இருக்கவே செய்தன.பாட்டாளி மக்கள் கட்சி பசுமைத் தாயகம் என்ற பெயரில் ஐ.நா.மனித உரிமைக் குழுவுக்குள் சென்றதைப் பாராட்ட வேண்டும்.ராமதாஸ் குழுவினரின் சாதி பிற்போக்குத்தனம்,ஈழ ஆதரவு இரண்டையும் வெவ்வேறு தராசுகளில் எடை போடுவது நல்லது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

நிரந்தர ஈழத்தமிழர்களின் குரலாக வை.கோ,நெடுமாறன் போன்றவர்களின் குரல் ஒலித்தாலும் அதற்கான வலுவான மக்கள் பலமில்லாமல் இருந்தது.
புதிய குரலாக சீமான் உருவாகினாலும் கூட அவரது உணர்ச்சி வசப்படல்,தெளிவான சிந்தனையற்ற தன்மை அல்ட்ரா போராளியாக மட்டுமே பிரதிபலித்தது.மே 17 இயக்க இளைய தோழர்கள் திருமுருகன்,உமர் போன்றவர்களின் உலக அரசியல் தெளிவு நம்பிக்கை அளித்தாலும் கூட மெரினா மெழுகுவர்த்தி போராட்டங்கள் வரவேற்பை பெற்றாலும் கூட மக்களிடையே பரவலாக போய்ச் சேரவில்லை.பத்திரிகையாசிரியர் அய்யநாதன் போன்றவர்கள் ஈழத்தமிழர்களின் பிரச்சினையை ஊடகங்கள் மூலமாக பேசி வந்தனர்.சென்ற பாராளுமன்ற தேர்தலின் காலத்தில் கவிஞர் தாமரை இந்தியா மீது அறம் பாடினார்.புலம் பெயர் தமிழர்கள் அமைப்பு ரீதியாகவும்,மனித உரிமைக்குழுக்களின் துணையோடும், உண்ணாவிரதம், ராஜபக்சே லண்டன் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் என பல வகையிலும் போராடியும் கூடஇலங்கை அரசு இந்தியா,சீனா,ரஷ்யா கவசங்களோடு அனைத்து அழுத்தங்களையும் உலக அரங்கில் உதாசீனப்படுத்தி வந்தது.ஒருங்கிணைந்த தன்மையற்ற நிலையில் தமிழர்களிடம் ஓரளவுக்கு சோர்வும் கூட காணப்பட்டது

இலங்கைப் பிரச்சினையை உலகம் திரும்ப பார்க்க வைத்ததின் பின்புலமாக புலம் பெயர்கள் தமிழர்கள் இருந்திருக்க கூடுமென்றாலும் கூட இலங்கையின் போர்க்குற்ற மனித உரிமை மீறல்களை.உலக அரங்கில் கொண்டு வந்ததின் முக்கிய பங்கு சேனல் 4 தொலைக்காட்சிக்கும்,அமெரிக்கா ஐ.நா மனித உரிமைக்குழுவில் இலங்கை மீதான தீர்மானம் கொண்டு வந்ததுமே.

இதனைத் தொடர்ந்து திருடனையே நீதிபதியாக நியமித்த கதையாக கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும்- LLRC என்ற பெயரில் இலங்கையே தன்னைத் தானே பரிசோதித்துக்கொள்வதாக அறிவித்ததன் அடிப்படையிலேயே இப்பொழுது இரண்டாம் முறையாக அமெரிக்காவின் தீர்மானம் நிறைவேறியுள்ளது. அமெரிக்காவின் தீர்மானம் நான்கு வரைவு மாற்றங்கள் செய்யப்பட்டு நீர்த்துப் போய் இருந்தாலும் கூட அமெரிக்க தீர்மானத்தை ஒட்டியே மேலும் தமிழர்கள் நகரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.சீனா,ரஷ்யா போன்ற நாடுகள் ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்து உதவப் போவதில்லை.

இப்பொழுது இந்திய பாராளுமன்றத்தில் தி.மு.க,அ,தி.மு.க போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தங்கள் போன்றும்,கலைஞர் கருணாநிதி கூட்டணியிலிருந்து தி.மு.க விலகிக்கொள்கிறது என்று காங்கிரஸை கழட்டி விட்டது போன்ற சூழலுக்கு ஏற்ப இந்தியா செயல்படும்.எனவே ஓரளவுக்கு மனித உரிமைகளை மதிக்கும் ஐரோப்பிய நாடுகள்,அமெரிக்காவின் ஆதரவோடு மட்டுமே ஈழத்தமிழர்களின் நல்வாழ்வுக்கான வழிகளை தேட முடியும்.

மாணவர்கள் போராட்டங்கள் அவசியமான ஒன்று என்பது நிரூபணமாகி விட்ட ஒன்று என்ற போதிலும் அமெரிக்காவிற்கு எதிராகவும் பெப்சி,கோகா கோலாவை புறக்கணிப்போம் போன்ற போராட்ட அணுகுமுறைகள் போராட்டத்துக்கு உதவாது.பெப்சி,கோகா கோலா புறக்கணிப்பு போராட்டம் ஏற்கனவே அமெரிக்கா ஈராக்கின் ஆக்கிரமிப்பில் பரிசோதனை செய்து பார்த்து தோல்வியடைந்த ஒன்று.அமெரிக்கா ஒரு புறம் மனித உரிமைகளை வலுப்படுத்தவும் இன்னொரு புறம் இலங்கைக்கு பொருளாதார ரீதியாக உதவுவது போன்ற இரட்டை கொள்கையாக போராட்ட களம் அமைய வேண்டும்.அமெரிக்கா மீதான எதிர்ப்பு சீனா,ரஷ்யா போன்ற நாடுகளுக்கும் முக்கியமாக இலங்கைக்கு உதவுவது மாதிரியாக அமைந்து விடும்.

ஒவ்வொரு இடத்தின் தூதரகங்கள் சார்ந்து மக்கள் போராட்டங்கள்,ஒரு நாட்டின் பிரச்சினைகள்,அரசியல் நகர்வுகள் என அத்தனையும் அரசு கொள்கைகள் அமைவதற்கு ஆவணப் பத்திரங்களாகின்றன என்பதை பத்திரிகை செய்திகளுக்கும் அப்பால் என்ன நிகழ்கின்றன என்பதை விக்கிலீக்ஸ் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது.எனவே போராட்டக்கள சாதுர்யம்,ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்த அல்லது மனித உரிமைகளைக்கு ஓரளவுக்கு முக்கியத்துவம் தரும் நாடுகளீன் நட்போடு இன்னும் மேல் நோக்கி நகர்வதே ஈழத்தமிழர்களுக்கு விடியலைப் பெற்றுத் தரும்.

வரும் நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தின் குரலையும்,ஈழத்தமிழர்களின் பிரச்சினையை ஜனநாயக ரீதியாக முன்கொண்டு செல்ல வேண்டிய ஒரு முக்கியமான காலகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.அரசியல் சுயநலங்கள்,ஓட்டுக்கு பணம் போன்றவைகளை புறம் தள்ளி யார் தமிழகத்தின் பிரச்சினைகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் குரல் கொடுப்பார்கள் என்றுணர்ந்து  செயல்பட வேண்டிய தருணமிது.மொத்தமாக ஒரே கட்சிக்கு வாக்களிப்பது கட்சி சார்ந்து நாடாளுமன்றத்தில் வலுவான நிலையை கொண்டு வருமென்றாலும் கூட ஜனநாயக ரீதியாக ஆரோக்கியமான ஒன்றல்ல.தமிழர்களின் மனநிலை என்னவென்பதை தேர்தல் முடிவுக்கு பின் அலசுவோம்.



Thursday, March 21, 2013

ஹம்மர் ரெய்டும் ஜனநாயக அநீதிகளும்

காட்பாதர் படத்தின் இத்தாலிய மாபியா கும்பல்களை நேரடியாக காண வேண்டுமென்றால் இந்திய அரசியல்வாதிகளின் குடும்ப கும்பல்களை ஒப்பிட்டால் போதும்.இருக்கும் ஆட்சி அமைப்புகளில் ஜனநாயகம் ஒன்றுதான் சிறந்தது.ஆனால் அதனை இந்திய மாபியா கும்பல்கள் பயன்படுத்தும் விதம் இப்பொழுது சமூக அக்கறையோடு போராடும் மாணவர்களுக்கே இவர்களிடம் நம்பிக்கையில்லாமல் போய் விட்டது.இளம் வயதினர் உணர்ச்சி வசப்பட்டு செயல்படுகிறார்கள் என சில மாங்காய்கள் சொன்னால் பெருசு அன்னா ஹ்சாரேயும்தானே போராட்டக்களத்தில் குதித்தாரே?

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சம பொருளாதார போட்டி காலமிது.ஆனாலும் இந்தியா சீனாவுடன் போட்டி போட முடியாமல் போவதற்கு முக்கிய காரணங்களே இந்த இந்திய மாபியா கும்பல்களும் இவர்களுக்கு வாலாட்டும் பீரோகிரட்டிக்குகளும்தான்..இந்த பெரும் கூட்டத்துக்கு மத்தியில் நாட்டுப் பற்றோடும்,சமூக அக்கறையோடும் செயல்படும் ஒன்றிரண்டு நல்ல மனிதர்களும் காணாமல் போய் விடுகிறார்கள்.

ஆட்சிக்கு முட்டுக்கொடுத்தால் எவ்வளவு வேண்டுமென்றாலும் திருடிக்கொள்ளலாம். கூட்டணியிலிருந்து விலகிக்கொண்டால் சி.பி.ஐ ரெய்டா?அப்படியே ரெய்டுன்னாலும் கூட ஒரு பிஸ்கோத்து வண்டி ஹம்மருக்கா ரெய்டு?ஒரு உழைப்பு திறனுமில்லாத ஸ்டாலின் பையனால் எப்படி கோடிக்கணக்கில் முதலீடு செய்து படம் தயாரிக்க முடிகிறதென்றல்லவா 2G காலகட்டத்தில் ரெய்டு நடந்திருக்க வேண்டும்? இது வரை தி.மு.க எத்தனை அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடித்த காங்கிரஸின் காரணம் ரெய்டு பிளாக்மெயில்தான் காரணமா?

தமிழகத்தில் அம்போன்னு போக இருக்கும் காங்கிரஸ் தனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை,தி.மு.கவுக்கு ஒரு கண்ணாவது போக வேன்டுமென்று துணைக்கு தி.மு.கவையும் இழுக்கும் முயற்சியா ரெய்டு?

சிபிஐ மேல் இருந்த மொத்த நம்பிக்கையும் போய் விட்டது.ஆளும் கட்சியின் அடியாட்கள் இவர்கள்.

எதிர்பார்க்காமலே விழுந்த ஒரு விக்கெட்டால் வாய்தா ராணிக்கு ஒரே குஷியாக இருக்குமே!

Wednesday, March 20, 2013

வை.கோ vs மாணிக் சந்த் -2009 பாராளுமன்ற தேர்தல்

விருதுநகர் தொகுதியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் இடையே நேரடிப் போட்டி நிலவியது.

கடும் இழுபறியாக இருந்து வந்த நிலையில் இறுதியில், 15,764 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக் தாகூர் வென்றதாக அறிவி்க்கப்பட்டது.

விருதுநகர் தொகுதியென்றவுடன் காமராஜரின் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் நம்பிக்கையான காங்கிரஸ் கட்சியின் ஆதரவு மாவட்டம் என்பதால்தான் பெயர்,முகம் அறிமுகமில்லாத மாணிக் சந்த் என்பவர் வை.கோ என்ற தமிழகம் அறிந்த கட்சித்தலைவரை தோற்கடிக்க முடிந்தது என்று நினைத்திருந்தேன்..மேலும் விருதுநகர் மாவட்டம் அண்ணாச்சிகளின் வியாபார முன்னேற்றங்களோடு கல்வி வளர்ச்சியிலும் முன்னேறிய மாவட்டம் என்ற கணிப்போடு வெளிநாடுகளில் படிக்கும் குழந்தைகளோடு ஒப்பிடும் போது தமிழக குழந்தைகளுக்கு வாய்ப்புக்கள் குறைவாக இருந்தாலும் கூட ஐ.க்யூ இயல்பாகவே அதிகமென விருதுநகர் நண்பர் ஒருவர் பெருமைப்பட்டுக்கொள்வார்.

நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நேர்பட பேசு நிகழ்ச்சியில் மாணிக் சந்த் என்ற இளைஞரைக் காண நேரிட்டது. கிட்டத்தட்ட நீயா நானா தொகுப்பாளர் கோபிநாத ஸ்டண்ட் காட்சியில் நடித்தால் டூப்ளிகேட் போடுவதற்கு வசதியான முக அமைப்பு.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மகேந்திரனோடு மாணிக் சந்த் விவாதிக்கும் போது இருவருக்கும் இலங்கை பிரச்சினையில் தங்கள் நிலைப்பாடுகளில் உணர்ச்சி வசப்பட ஒருமைத் தன்மையில் மாணிக்சந்த் ஒண்டிக்கு ஒண்டி எங்கே வரட்டும் என கோதாவில் இறங்கினார்.

விவாதத்தில் கோபம் பொங்குவது அதுவும் இலங்கைப் பிரச்சினை,அமெரிக்க தீர்மானம் நீர்ந்துப் போன நிலை,காங்கிரஸின் மத்திய ஆட்சி நிலைப்பாட்டில் தயக்கம் போன்ற சூழலில் உணர்ச்சி வசப்படுவதும் கூட தவறில்லை.பதவிகள்,பொறுப்பு இரண்டாம் பட்சம்தான்.அடிப்படையில் உணர்வுகளே முதன்மை வகிக்கின்றன என்பதால் காரசார விவாதங்களை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் விருதுநகரில் செயல்படாத ஒரு ரோபோவை உருவாக்கி அதன் கையில் காங்கிரஸ் கொடியைக் கொடுத்து கழக கூட்டணிகளில் ஏதாவது ஒன்றின் துணையோடு நிற்க வைத்தாலும் கூட ரோபோ ஜெயித்து விடும் போல் தெரிகிறது.

நேர்பட பேசு விவாதத்தின் போது மகேந்திரன் அமெரிக்க வரைவு தீர்மானம் குறித்தும் ஐ.நா மனித உரிமைக்குழுவின் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்களின் மனித உரிமைக்குழு அறிக்கை பற்றியும் குறிப்பிட்டார்.மாணிக் சந்த் எம்.பி யின் வரிசை வரும்போது மகேந்திரனை திருத்தும் விதமாக நவநீதம் பிள்ளையின் பெயர் நவீன் பிள்ளையென்றும் அவர் ஒரு ஆண் என்றும் விளக்கெண்ணை விளக்கம் கொடுத்தாரே பார்க்கலாம்! இந்த மாதிரி களிமண்ணுகளா பாராளுமன்ற உறுப்பினர்?

இந்த மாதிரி இன்னும் எத்தனை புத்திசாலிகள் பாராளுமன்றத்தில்,வெளியுறவுக் கொள்கையில்,பீரோகிரட்டிக் வரிசையில் நிற்கிறார்களோ!

விருதுநகர் மாவட்டம் செய்த இரண்டு வரலாற்றுத் தவறுகள்

1967ல் படுத்துகிட்டே ஜெயிப்பேன் என்ற நம்பிக்கையில் மண்ணை வாரிப் போட்டு காமராஜரை தோற்கடித்தது.

2009ல் வை.கோவை பாராளுமன்றம் அனுப்பாமல் மாணிக்சந்த் என்ற மகாபுத்திசாலியை எம்.பி பட்டம் சுமக்க வைத்தது.

விருதுநகரே! இனியாவது விழித்துக்கொள்!



Tuesday, March 19, 2013

முள்ளிவாய்க்காலுக்கும் அப்பாலான நிதர்சனங்கள்.

போர்க்கால நினைவுகளை மீள் நினைவுபடுத்தினால் ஏழுத்தை மீறிய சிந்தனைகள் சிதறுகின்றன.போர் காலத்தின் இணையக்குரல்கள் செவிடன் காது சங்கு போல் ஆகிவிட்டன.இலங்கை ராணுவம் நந்திக்கடலின் இரு திசைகளிலும் வந்து இணைந்து தமது வெற்றியைப் பிரகடனப்படுத்திக் கொண்டன.பிரபாகரனின் மரணம் குறித்த குழப்பங்கள் பலவிதமான ஊகங்களை கொண்டுவந்தன.நக்கீரன் பத்திரிகை பிரபாகரன் பத்திரிகை படித்துக்கொண்டிருப்பது மாதிரியான வெட்டு ஒட்டுதல்களை செய்து குழப்பியது.இறந்த முகத்தில் முடி முளைக்குமா என்ற விஞ்ஞான ஆராய்ச்சிகள் முன்வைக்கப்பட்டன.நிறைய பதிவர்கள் பல விதமான விவாதங்களை வெளிக்கொண்டு வந்தனர்.தமிழ் மணத்தின் ஈழம் பகுதி பதிவுகளோடு காணொளிகள் பலவற்றையும் கொண்டு வந்தது. காணொளிகளின் தாக்கம் துவக்கத்தில் அதிர்ச்சிகளை உருவாக்கி விட்டு தொடரும் பதிவுகள் மரத்துப்போன நிலைக்கு கொண்டு வந்து யார் சொல்வது உண்மை எது பொய் என்ற குழப்பங்களை உருவாக்கியது.விடுதலைப்புலிகள் மீதான விமர்சனங்கள் காரணமாகவும் நிகழ்ந்தவை என்ன என்பதை வெளியே கொண்டு வராதபடி பன்னாட்டு பத்திரிகையாளர்கள் யாரும் இலங்கைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

ராஜபக்சே சகோதரர்கள் நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு தொலைக்காட்சிகளில் தோன்றிக்கொண்டிருந்தார்கள்.2009ம் ஆண்டின் மே மாத காலத்திற்கும் முன்பே 2008ம் வருடம் நவம்பர் துவக்கம் முதல் போர் குறித்த கவலைகள் வெளிப்பட்டாலும் கூட மத்திய அரசு,தமிழக மாநில அரசுகளின் சித்து விளையாட்டுக்களில் திசை திருப்பப்பட்டு கோவை இராணுவ வாகன் தாக்குதல்,கோபம்,மாணவர்களின் போராட்டம்,வழக்கறிஞர்கள் போராட்டம், முத்துக்குமாரின் மரண சாசனம் என பலவும் ஆளும் தி.மு.கவால் திசை திருப்பப்பட்டு விட்டன.ராஜபக்சேவை கோபப்படுத்தக்கூடாது போன்ற அறிக்கைகளும்,சமாதான முயற்சி என்ற பெயரில் ராஜபக்சேவை சந்தித்து விட்டு வந்த தமிழக எம்.பிகள் என்பவற்றோடு முக்கியமாக 2009ம் ஆண்டில் கூடிய மனித உரிமைக்குழுவில் ராஜபக்சே அரசுக்கு சாதகமாக தீர்மானம் நிறைவேறியதும் கூட பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. இந்து ராம், சுப்ரமணியசுவாமி போன்றோரின் இலங்கை சார்பு எரிச்சலையும், கவலையையும் கொடுத்தது.இலங்கை அஜெண்டாவை ராஜபக்சே,ஜி.எல் பெரிஸ் போன்றவர்களிடம் கேட்பதை விட இவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

பின்பு 2G வந்து ஆக்கிரமித்துக் கொண்டது.இங்கும் அங்குமாக இணையத்தில் சோக ராகம் பாடினாலும் கூட அமிதாப்பச்சன் தலைமையில் இலங்கையில் நிகழவிருந்த IIFA (International Indian Film Academy) நிகழ்ச்சியை நிகழவிடாமல் செய்தது,லண்டனுக்குப் போன ராஜபக்சே சிவப்பு துண்டைக் காணோம்,கட்டிய வேட்டியைக் காணோம் என இலங்கை தூதரகத்தில் புகுந்து கொண்டு இலங்கை திரும்பியது,டைம்ஸ் பத்திரிகையின் சிறந்த மனிதர்களில் ராஜபக்சேவின் பெயர் முன்னிலையில் இருந்த ஓட்டுப்போடும் தில்லுமுல்லுகளை டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவிக்கப்பட்டு ராஜபக்சே ஓட்டை செல்லாக்காசு ஆக்கியது,புலம் பெயர்ந்த தமிழர்கள் உண்ணாவிரதம் போன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் கிடைக்காத திசைமாற்றம் சேனல் 4ன் கெலம் மெக்ராவின் போர்க்குற்ற காணொளிகளின் ஒருங்கிணைப்பிலும் அமெரிக்காவின் மனித உரிமைக்குழுவில் 2012ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திலும் இலங்கை அரசின் கோர முகம் உலகிற்கு மெல்ல தெரிய ஆரம்பிக்கின்றது.

2013ம் ஆண்டின் பிப்ரவரி,மார்ச் மாதங்களையும் இந்திய,தமிழக சூழல்களை லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் திசை மாற்றிய வரலாற்றை பதிவு செய்திருக்கிறது.அதனைத் தொடர்ந்த மற்ற கல்லூரிகளின் மாணவ,மாணவி சகோதர,சகோதரிகளின் உணர்வும்,போராட்ட எழுச்சியும் கருணாநிதி vs ஜெயலலிதா செயல்படும் முறைகளை ஒப்பிட வைக்கிறது. இருவரின் ஆட்சிகளின் சூழல் முறைகள்,அரசியல் லாபங்கள் வேறுபட்டாலும் கூட மொத்தப் போராட்ட கையாளும் முறைகளில் ஜெயலலிதா ஸ்கோர் செய்கிறார்.அதற்கு தி.மு.க செயல்பட்ட விதம் கூட ஜெயலலிதாவுக்கு துணை செய்கிறது எனலாம்.

கலைஞர் கருணாநிதி எவ்வளவு அடிச்சாலும் தாங்குவதோடு தன்னையும்,கட்சியையும் தக்கவைத்துக்கொள்ள நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிக்கை மேல் அறிக்கை விட்டுக்கொண்டிருப்பதும்,கலைஞரின் நிலைப்பாட்டுக்கு எதிராக அறிக்கை விடுவதென்றால் ராஜபக்சே தொழுத திருப்பதியின் லட்டு மாதிரி என்ற மகிழ்ச்சியில் ஜெயலலிதாவின் அறிக்கைகள் வெளிப்பட்டாலும் காலம் கடந்து இருவரும் ஈழப்போரின் பரிணாமங்களை மாற்று திசைகளிலிருந்து புரிந்து கொண்டிருக்கிறார்கள்.கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று ஒன்றாக குரல் கொடுத்தால் இன்னும் வலுப்படும் தமிழர்களின் உணர்வுகள் இருவரின் ஈகோ,தமிழக அரசியல் கலாச்சார சூழல்களால் தனித்தனியாகவேனும் சேர்ந்து ஒலிப்பதை பாராளுமன்ற விவாதங்கள் இப்பொழுது ஆவணப்படுத்தியுள்ளன.இந்தியாவின் இலங்கை வெளியுறவுக்கொள்கை கலைஞர் கட்டுமரமாக தத்தளித்துக்கொண்டிருப்பதை 2013ம் ஆண்டின் ஐ.நா மனித உரிமைக்குழுவின் அமெரிக்க வரைவு தீர்மானத்தில் மோடிமஸ்தான் மாதிரி இந்தியா இந்த கணம் வரை மௌனம் காக்கிறது.

மேடைகள்,இந்தி எதிர்ப்பு போராட்டம்,ஆட்சி அனுபவம்,எதிர்க்கட்சி, எதிர்க்கட்சியுமில்லாத சென்ற தமிழக தேர்தலின் தோல்வி,தோல்வி தந்த ஆற அமர உட்கார்ந்து யோசிக்கும் நிலை,டெசோவை தூசி தட்டி டெல்லி வரை கொண்டு சென்ற சாதுர்யம்,ராஜபக்சே,மத்திய அரசு சொன்னதை நம்பி ஏமாந்து விட்டேன் என்ற வெளிப்படைத்தன்மை இவற்றையெல்லாம் மாணவர் போராட்டம் காங்கிரஸ் என்ற நொண்டி வாத்தை விட்டு விடும் பயத்தை விட்டுக் கொடுத்திருக்கிறது கலைஞருக்கு.இந்திய அரசியல் மாற்றங்களை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.முலாயம் சிங்,மாயாவதிகளின் நம்பகத்தன்மை சந்தேகத்துக்குரியது என்பதால் முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.மன்மோகன் சிங் ஆளை விட்டால் போதும் என இன்னும் மௌன விரதத்தை தொடர்கிறார்.பி.ஜே.பி வந்தாலும் இலங்கை விசயத்தில் பெரும் மாற்றஙகளைக் கொண்டு வந்து விடாது என்பதை சுஷ்மா ஸ்வராஜின் இலங்கைப் பயணமும் அதனைத் தொடர்ந்த ராஜபக்சே இந்திய வருகையும் உறுதிப்படுத்துகின்றன.

சகோ.சார்வாகன் அமெரிக்க தீர்மான வரைவு குறித்து பதிவு போட சொன்னார்.முதல் வரைவின் சொற்பதங்கள் பரவாயில்லை என்கிற நம்பிக்கையிலிருந்து 2,3,4ம் வரைவு மாற்றங்கள்அமெரிக்க தீர்மானம் கழுதை தேய்ந்து கட்டெறும்பு மாதிரியாக நீர்த்துப் போய் விட்டாலும் கூட அடுத்த குறுகிய கால கூட்ட அறிக்கை, வருட அறிக்கை எப்படி நகரும் என்பதை எடை போட உதவும்.இன்னும் இந்திய மௌனம் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது நாளை அல்லது மறுநாள் தெரிய வரும்.தற்போதைய நிலையில் இந்தியா இல்லாமல் கிட்டத்தட்ட 30 நாடுகள் அமெரிக்க தீர்மான ஆதரவு தரப்புக்களாய் இருக்கின்றன என்பதால் இந்திய ஆதரவு இல்லாமலும் தீர்மானம் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் இருக்கின்றன என்ற போதிலும் இந்தியாவின் நிலைப்பாட்டை அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

கலைஞரின் கூட்டணி விலகல் தி.மு.கவிற்கு புதிய வெளிச்சத்தைக் காட்டும்.காலம் கடந்தாவது தனது அரசியல் முத்திரையை பதித்த  கலைஞருக்கு வாழ்த்துக்கள்.2009ல் செய்ய தவறிய தவற்றை இனிப் பேசி பயனில்லை.அது கோப வெளிப்பாடுகளுக்கும்,விவாதத்திற்கு மட்டுமே பயன்படும்.இன்னும் ஈழ நகர்வை முன் கொண்டு செல்ல உதவாது.

தலைப்பில் நிதர்சனங்கள் என குறிப்பிட்டதற்கு காரணம் நிகழ்வுகளை ஒட்டியே நாம் இன்னும் வரலாற்றை முன்கொண்டு செல்ல வேண்டிய சூழலில் இருக்கிறோம்.இப்படி நடந்தால்,அப்படி நடந்தால் அல்லது அப்படியான பின் எப்படி என்ற ஹைபோதிசிஸ் கருத்துக்கள் உதவாது.மனித உயிர்களின் இழப்புக்கள்,தி.மு.க ஆட்சியின் தவறுகள் தமிழர்களின் கறுப்புப் பக்கங்கள் எனபது நாம் விரும்பாமலே நிகழ்ந்து விட்டன.துயரங்களைக் கடந்து ஈழ மக்களுக்கு ஏதாவது வழிகாட்டுவது மட்டுமே இனி யதார்த்தமாக இருக்க முடியும்.

தமிழக தொலைக்காட்சிகளில் பக்க சார்பில்லாமல் நிகழ்வுகளையும், விவாதங்களையும் புதிய தலைமுறை தொலைக்காட்சி பலருக்கும் கொண்டு சேர்த்திருக்கிறது.வட மாநில ஆங்கில ஊடகங்கள்தான் கருத்து கந்தசாமிகளாய் இருந்த நிலையை புதிய தலைமுறை மாற்றியிருக்கிறது.பல விவாத முகங்களை தமிழில் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

தமிழக மாணவர்களின் எழுச்சிப் போராட்டம் தமிழகம் குறித்த எதிர்கால நம்பிக்கையை தருகிறது..

Sunday, January 27, 2013

Saturday, January 26, 2013

மோடி vs ராகுல் தேர்தல் களம்.

நம்மைப் போன்ற கருத்து விமர்சகர்களுக்கு வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்திய அளவில் பிஜெபிக்கான ஆதரவும் இல்லாமல் காங்கிரஸ்க்கான ஆதரவு இல்லாத யோக நிலையே என்ற போதிலும் பொதுவான அரசியல் களம் என்ன என்பதை மட்டும் ஆராய்வோம்.

காங்கிரசில் மன்மோகன் சிங்கின் செயல்படா ஊமைத்தனத்தால் தான் ஓய்வு எடுக்க நினைத்தாலும் பதவியை ராகுலுக்கு மாற்றிவிடும் ராஜதந்திரமற்ற நொண்டி வாத்தாகவே வெளியேறுகிறார்.பிஜேபி எந்தவித அரசியல் ஸ்டண்ட் செய்யாமலே பிஜெபியின் வாயிலே வாழைப்பழத்தை ஊட்டி விடப்போகிறது.

இந்திய ஜனநாயகம் வேரூன்றியிருந்தாலும் களநிலையை மாற்ற முயற்சிக்கும் சித்து விளையாட்டுக்களும் கூட நிகழும் வாய்ப்பு உண்டு என்ற போதிலும் பொதுவான இந்திய அரசியல் சூழலை மாற்றி விட முடியாது.மோடியை பிரதமராக முன்னிறுத்தி பிஜெபி ஆட்சிக்கு வருவதால் குஜராத் இஸ்லாமியர்கள் மகிழ்ந்தாலும் இப்பொழுதே வயிற்றில் புளி கரையும் நிலையில் இருப்பவர்கள் தாங்கள்தான் தமிழக இஸ்லாமியர்களைக் காக்க வந்திருப்பதாக நினைக்கும் சில அடாவடி இஸ்லாமிய இயக்கங்களே.
இங்கிருந்து நகர்ந்து தி.மு.க,அ.தி.மு.க என்ற கப்பல்களின் கேப்டன்களை நோக்கினால் .அ.தி.மு.க + பி.ஜெ.பி என்ற நிலையில் வண்டியில் உட்கார்ந்து கொண்டே காங்கிரஸ்க்கு ஒரு கராத்தே கிக் விடும் பலமிருந்த சூழலில் கலைஞர் பம்மி பதுங்கியதிலிருந்தே கூட்டணி கலாச்சாரத்துக்கு மதிப்புக் கொடுக்கிறேன் என்ற பெயரில் காங்கிரசோடு ஒட்டிக்கொண்டு முக்காடு போட்டுக்கொள்ளும் சூழலே தென்படுகிறது.இதனைக் கடந்து கூட்டணி சந்தர்ப்ப வாதம் எப்படி அமைகிறதென இனி வரும் காலத்தில் கணிக்கலாம்.

இந்தக் காலகட்டத்தில் இந்தியா டுடே பத்திரிகை எடுத்த கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி 152 - 162 தொகுதிகளையும் பிஜேபி 198- 208 தொகுதிகளைக் கைப்பற்றும் என்கிறது.இதில் மூன்றாம் அணிக்கான கனவுகளிலும் சிலர் இருக்க கூடும்.ஆனால் சாத்தியங்கள் குறைவு.

பத்திரிகைகளின் கருத்துக்கணிப்புக்கும் பெப்பே காட்டிவிட்டி தேர்தல் முடிவுகள் வருவதுமுண்டு.உதாரணம் கடந்த பாராளுமன்றத் தேர்தல்.

Friday, January 25, 2013

பாராளுமன்றத் தேர்தலின் இரு தேவைகள்

அரசியல் விமர்சனம் மற்றும் சில நிகழ்வுகளை அப்போதைய உணர்ச்சிகளில் சொல்லி விட்டு பின் திரும்பிப் பார்க்கும் போது உண்மையாகிப் போவதும் சில நேரங்களில் நினைத்ததுக்கு மாறாக போய் விடுவதுமுண்டு.இதற்கு உதாரணமாக 60 ஆண்டுகளில் இந்தியா அபார வளர்ச்சி பெற்றிருக்கிறது எனும் ஜனாதிபதி நாற்காலியை சூடாக்கிக் கொண்டிருக்கும் பிரணாப் முகர்கியை சொல்லலாம்.அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என கவுண்டமணி பாணியில் கையை தட்டி சிரித்து விட்டு இதோ மறுபடியும் அரசியல் பேச வந்திருக்கிறேன்.

விரும்பா விட்டாலும் கூட வாரிசு அரசியலுக்கு ராகுல் வரும் சாத்தியமிருக்கிறது என்று முன்பு சொன்னதற்கான சாத்தியங்கள் காங்கிரஸ் சார்பில் உருவாகுவதும் தி.மு.கவுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வடிவேல் போனதை வடிவேலண்ணே!வேண்டாமென சொன்னதும் உண்மையாகிப்போனது.

சில அரசியல் விமர்சனங்கள் உண்மையாகிப்போனதின் நம்பிக்கையில்
வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தின் நலனுக்கு எதிரான இரண்டு தீய இயக்கங்களாக பாட்டாளி மக்கள் கட்சி,இஸ்லாமிய தீவிரவாதத்தை விதைக்கும் இரண்டு நோஞ்சான் கட்சிகள் ஆனால் ஆபத்தான கட்சிகளை பாராளுமன்ற வளாகத்துக்குள் செல்லும் சந்தர்ப்பம் இல்லாமல் போக கடவது.முடிந்தால் இரு இயக்கங்களும் ஒன்றாக இணைந்தே தேர்தலை சந்தித்துப் பார்க்கட்டும்.இந்த கட்சி இயக்கங்களை தமிழக அரசியலிருந்து அப்புறபடுத்துவது தமிழகத்தின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும்.கூடவே இவைகளுக்கு மாற்றாக குரல் கொடுக்க ஏதாவது இயக்கங்கள் வந்தால் பின் தங்கிய நிலையிலிருக்கும் மக்களை மேன்மை படுத்தும் திட்டங்களோடு முன்வந்தால் கரம் கொடுப்போம்

இதற்கான காரணமாக

1. சாதியால் மக்களை பிரிக்கும் ராமதாஸ் விசமத்தனத்தின் சுயநலம்.

2 கலாச்சார தீவிரவாதங்களை தமிழகத்தில் திணிக்க முயலும் இஸ்லாமிய இயக்கங்கள்.

ராமதாஸின் ஆதரவாளர்களும்,கலாச்சார தீவிரவாத ஆதரவாளர்களும் தீயாக தனியாகவோ அல்லது இணைந்தோ தங்கள் தேர்தல் பணியை இப்பொழுதிருந்தே ஆரம்பிக்கலாம்.ஒரு தீமை இன்னொரு தீமையை கட்டியணைப்பதில் தவறில்லை:)

பதிவை இன்னும் கொஞ்சம் வலுவாக்க பதிவர் இக்பால் செல்வனின் பதிவில் சொன்ன பின்னூட்டத்தின் சாரத்தையும் காபிக்கு சர்க்கரை மாதிரி கலக்கிக் கொள்கிறேன்.

இதுவரை ரஜனியாவது தனது அரசியல் ஆசையை வருவேன் ஆனால் வரமாட்டேன் பாணியில் சொல்லிகிட்டிருந்தார்.ஆனால் கமலோ தான் அரசியல் வனவாசம் செய்தவன் என்பதை துவக்க காலம் முதல் சொன்னதோடு இதுவரை செயல்படுத்தியும் இருக்கிறார்.ஜெயலலிதாவின் பாராளுமன்ற பகடை உருட்டல் இந்த முறை தற்போதைய சூழலில் புதிய அரசியல் அலையை வீசும் சாத்தியங்கள் உருவாக்கி இருக்கிறது.ஒரு புறம் வாரிசு அரசியல் இன்னொரு பக்கம் சுனாமி அறிக்கை மாதிரியான ஜெயலலிதாவின் அரசியல்,ராமதாஸின் சாதி வெறி,மதவாதிகளின் முகம் காட்டும் ஆசை,வீணாப்போன சீமான்,திருமா,பக்க பலமில்லாத வை.கோ,பின்னூட்டத்தில் விட்டுப் போன விஜயகாந்த் என ஒரு புதிய தேர்தல் அரசியல் விரைவில் அரங்கேறப் போகிறது.யார் எந்தப் பக்க கூட்டணி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 



 

Monday, January 14, 2013

மார்க்கத்தின் மூர்க்கத்தோடு

பதிவுகள் இடுவதற்கும் எதிர் வினையாற்றுவதற்கும் புற்றீசல்கள் மாதிரி ஒன்றைக் கடந்து இன்னொன்று என தீயவைகள் உலகை வலம் வருகின்றன.புத்தாண்டாக,பொங்கலாக நல்லவைகள் கண்ணில் பட்டால் மட்டும் பதிவு செய்வோம் என்ற நினைப்பை ரிசானாவின் ம்ரண தண்டனை காணொளி தோல்வியுறச் செய்து விட்டது.

ரிசானாவின் மரணம் குறித்து பலரும் பதிவுகள், பின்னூட்டங்களிட்டும் அதன் தாக்கம் பெரிதாக மனதை பாதிக்கவில்லை.உளவியல் ரீதியாக ஒருவரது மரணத்தை ரசிக்கும் மனப்பான்மையே பலருக்கும் இருக்கிறது என்பதை அத்தி பூத்தாற் போல நிகழ்ந்த ஒரு மரணதண்டனையை பார்வையிட பலரும் சென்ற போது நானும் சாமி கும்பிடாத லெபனான் பாஸும் போகவில்லை. 

மரணதண்டனை தேவையா இல்லையா என பெரும் விவாதங்கள் நிகழ்கின்றன.பல நாடுகள் மரணதண்டனையை ஒழித்து விட்டன. மரண தண்டனையை நிறைவேற்றும் நாடுகள் கூட பொதுமக்கள் முன்பு தண்டனையை நிறைவேற்றுவதில்லை.ஒரு மனித உயிர் வலியில்லாமல் எப்படி மரிக்க இயலும் என்ற பரிசோதனைகளில் உலகளாவிய அளவில் பலநாடுகள் பெரும்பாலும் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுகின்றன.

ஈராக்கின் ரத்தம் படிந்த வரலாறு எப்படியிருந்த போதிலும் உலக நாகரீக தொட்டில்களில் ஈராக்கும் ஒன்று.ஒரு இஸ்லாமிய தேசம் என்பதோடு அரேபிய நாடுகளில் ஓரளவுக்கு செகுலரான நாடாகவும் ஈராக்கை சொல்லலாம். வரலாறுகள் தவறாக மாற்றி எழுதப்படுகின்றன என்பதற்கு ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பும் ஒன்று எனலாம்.

அமெரிக்க தலையீட்டிற்கு பின்பு சதாம் உசைனின் மரணதண்டனையைக் கூட தனியாக தூக்கிலிட்டே கொன்றார்கள்.அப்படியிருந்தும் உள்துறையின் கசிவால் சதாமின் மரண தண்டனை உலகின் பார்வைக்கு வந்து விட்டது.அல்லாஹ் அக்பர் என உச்ச கொலைவெறிக் குரலிட்டு காமிரா சகிதம் மேற்கத்திய நாட்டவர்களின் கழுத்தை அறுக்கும் மத தீவிரவாதங்களுக்கும் கூட அரசியல் ரீதியாகப் பார்த்தால் ஒரு அஜெண்டா இருக்கிறது எனலாம்.

ரிசானாவின் குற்றச்சாட்டில் பல விவாதக் கேள்விகள் எழுந்தும் கூட ஒரு மரணதண்டனையை நிறைவேற்றும் அதிபயங்கரம் எழுத்தில் சொல்லி விவரிக்க இயலாது.மதம் சார்ந்து கடவுள் மறுப்பாளர்கள், மதநம்பிக்கையாளர்கள் என இரண்டு பக்கங்களையும் பார்க்க நினைக்கும் நடுவண் நிலையைத் தாண்டிய மனித உயிர்க்கொலை ரிசானாவின் மரண நிகழ்ச்சி நிரல்.

குற்றங்களுக்கான தண்டனைகள் தற்காலிக நிவாரணியே.அதிலும் கடும் தண்டனைகளால் குற்றங்கள் மறுபடியும் நிகழ்வதில்லையென்றால் சவுதியில் ரத்த வெள்ளத்திற்கு பதிலாக பாலாறும்,தேனாறும் ஓடவேண்டும்.ஒரு நாட்டில் நிகழும் குற்றங்களை வெளிப்படையாக பொதுப்பார்வைக்கு கொண்டு வருவதால் அந்த நாடு குற்றங்கள் நிறைந்த நாடு என்று சொல்ல முடியாது.அது போல் இரும்புக்கரம் கொண்டு இருட்டில் குற்றங்களை வெளியே சொல்லாமல் இருந்து விடுவதால் மட்டுமே ஒரு நாடு புனிதபூமி என்று பெருமை கொண்டாட முடியாது.வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை அந்தந்த நாட்டு மக்களின் குணாதியங்களை எடை போடும் வலிமை பல நாடுகளிலிருந்தும் பணிநிமித்தமாக வாழும் பல நாட்டு மக்களையே சேரும்.குறிப்பாக பணிப்பெண்களாக பணிபுரியும் பெண்கள் மட்டுமே இவர்களின் நல்ல குணங்களையும்,யோக்கியதைகளையும் சொல்லும் தகுதி பெற்றவர்கள். ஆனால் இவை எந்த விதமான துணையுமில்லாமல் ஒருமித்து இல்லாமல் நெல்லிக்காய்கள் போல் சிதறிக்கிடக்கின்றன.குறைகளை பொருளாதாரம் என்ற ஒற்றைச் சொல்லால் கடந்து விடுகிறது.தூதரகங்கள் ஒப்புக்கு சப்பாணிகள் மட்டுமே.

ஆடுகளை பலிகொடுக்கும் பழக்கத்தில் மனித உயிர்களையும் தண்டனை என்ற பெயரில் பலிகொடுக்கும் காட்டுமிராண்டித்தனத்தை மதநம்பிக்கை, மதமறுப்புக்கள் கடந்து கண்டிக்க வேண்டியது அவசியம்.

அமெரிக்காவின் சுயநலம்,சவுதி அரேபியாவின் மத மூர்க்க காட்டுமிராண்டித்தனம்,அறிவுக்கண் அவிந்து போன சவுதியின் சட்டங்களுக்கு ஜே போடும் பதிவுலக காட்டான்கள்!

Shame on America's economic ethics,Saudi's unreligious values and bloggers dehumanised blind support in the name of religion.